Tuesday, March 19, 2019

ஒரு கண்ணில் சுண்ணாம்பு

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் பூசுவது கூடாது என்பார்கள்! வெண்ணெயில் மாவைக் கலந்து பிசைந்து விற்கின்ற ஆஸ்திக வெண்ணெய் வியாபாரிகள் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் கூட வெண்ணெயைக் கண்ணில் பூசிக் கொள்ள மாட்டார்கள், மனிதர்கள் நம் கடவுள்கள்தான் எதை எங்கே வேண்டுமானாலும் பூசிக்கொள்ளும்! ஊற்றிக்கொள்ளும்! வாயில் ஊற்ற வேண்டியதைத் தலையில் ஊற்றிக் கொள்ளும்! நாக்கினால் சுவைக்க வேண்டியதை மேலே பூசிக் கொள்ளும்!

பக்தர்கள் தங்களுக்குப் பிரியமானதைத் தான் கடவுளுக்குக் காணிக்கையாகத் தருகிறார்கள்! சில கடவுள்களுக்கு கள்ளும் சுருட்டும் தருகிறவர்கள் கூட இருக்கிறார்கள்! ஆதலால் மூக்குப் பொடி போடுகிற பக்தர்கள் மூக்குப்பொடி தரலாம்! முகத்தில் பவுடர் போட்டுக் கொள்கிறவர்கள் கடவுளுக்கும் (அல்லது அம்மனுக்காவது) ஒரு டின் 'குட்டிக்குரா' பவுடர் தரலாம்!

ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மற்றொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் பூசுவது தப்புத்தான்! வெண்ணெயையே பூசக்கூடா தென்றால் சுண்ணாம்பை மட்டும் பூசலாமா?

ஹரித்வாரத்தில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு இந்திய சர்க்கார் 36 லட்ச ரூபாய் செலவழித்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது.

"நான் ஜாதிச் சார்பற்றவன், எல்லா ஜாதிகளும் எனக்கு ஒன்றுதான்,''

என்று கூறிக்கொண்டே 5 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ஜாதி மாநாட்டுக்குச் சென்றால் என்னைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?

''மதுவிலக்குக்காகவே நான் மூன்று தடவை சிறைக்குப் போயிருக்கிறேன்,''

என்று சொல்கிற ஒருவர் கள்ளுக்கடை கண்ட்ராக்ட் எடுத்தால் அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் பிடித்திட்டுக் கண்ணால் மயக்குவதை எதிர்த்து நின்று முற்றுந் துறந்ததாகக் கூறுகின்ற முனி புங்கவர் ஒருவர், வேசி வீட்டில் கிருஷ்ணலீலை செய்து கொண்டிருந்தால் அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?

'மதச் சார்பற்ற சர்க்கார்' என்று பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய மூன்றிலும் வைத்துப் பாடி வருகின்ற மத்திய சர்க்கார் ஹரித்வார கும்பமேளத்திற்காக 36 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்!

வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவுக்கும், நாகூர் கந்தூரி விழாவுக்கும் இனிமேல் விகிதாசாரம் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவமாட்டார்கள், நீதி நெறி நிற்கின்ற நேரு சர்க்கார்! நிச்சயம் இது!

கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும் மத்திய சர்க்காருக்கு எழுதி உடனே தங்கள் தங்கள் பண்டிகைகளுக்குப் பண உதவி பெறுமாறு நினைவூட்டுகிறேன்!

மதச்சார்பற்ற சர்க்காராகையால் நிச்சயம் கொடுப்பார்கள்! கேட்பதையும் சற்றுத் தாராளமாகக் கேளுங்கள். கருமித்தனம் வேண்டாம்! மூன்று லட்சத்திற்குக் குறையாமல் கேளுங்கள்!

புதுக்கோவில் கட்டுகிறவர்கள் கூடப் பணம் கேட்கலாம்! மதச் சார்பற்ற சர்க்காராதலால் நிச்சயம் பணம் கிடைக்கும்!

(17.4.50)

சுந்தரீ! சோமபானம் கொண்டு வாடீ!

"ஏண்டீ, உன்னைத்தானே! சுந்தரீ! வாடீ! வாடீ! ஒரு டம்ளர் பானம் கொடு! அப்படியே எனக்கு ஒரு முத்தமும் கொடு!''

''சே! நீங்களொரு வெட்கங்கெட்ட மனுஷர்! 20 வயசுப் பெண்ணு கேட்டுண்டிருக்கே என்கிறதுகூடத் தெரியாமே, இப்படி யாரானும் பேத்துவாளோ! என்ன வேணும்? காப்பியா? பால்காரன் வரலையே!"

"காப்பியா! அது ஏண்டீ இப்போ? அதிலே போதையே இருக்கிறதில்லையே! ஒரு டம்ளர் சோம பானம் கொண் டாடீ!" என்று கேட்டார் வவுத்துநாத சர்மா!

"சோமபானமா? இதோ கொண்டவர்றேன். அது சரி! என்ன இவ்வளவு ஆனந்தமாயிருக்கேள்? ஹைகோர்ட் ஜட்ஜ் வேலை கிடைக்கப்பேறதோ?" என்று கேட்டாள், சர்மாவின் தர்மபத்தினியான துரோபதாபாய்!

''ஹைகோட் ஜட்ஜா? அது தானே கிடைக்கப்பெறாது! அதற்கு முன்னாடி எது செய்யணுமோ அதை செஞ்சு முடிச்சேன். அப்படி! இந்த ஒரு மாசமா என்ன கஷ்டம்? எவ்வளவு சிரமம்? னோக்கு என்னடீ தெரயும்? எத்தனை தடவை மெட்ராசுக்குப் போறது? எத்தனை தடவை ட்ரங்க்போனில் பேசறது? நம்பளவாளா இருந்தால் எல்லாம் ஒரே பேச்சில் முடிஞ்சு போயிருக்கும். இந்த சூத்திரன்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போய் என்ன கஷ்டமாயிருக்கு போ!''

"சொல்லித் தொலையுங்களேன்! தொண தொணன்னு 'கோர்ட்டி'லே பேசறமாதிரிப் பேசறேளே!''

"அதுதான் சொல்லப் போறேனடி! இந்தக் கருஞ் சட்டைக்காரன்கள் இருக்கான்களோன்னோ! ராமசாமி நாய்க்கன் கூட்டம்! அவன்கள் கொட்டத்தை அடக்கிப் பிட்டேன்!''

"ஓஹோ! அவா பந்தலைக்கூடக் கொளுத்த ஏற்பாடு செஞ்சேளே! அவன்கள்தானே! ரொம்ப சந்தோஷம்! நான்கூட இன்னிக்கு சோமபானம் சாப்பிட்டுப் பார்க்கப் போறேன். எப்படி அடக்கினேள்? பெரிய கூட்டமாச்சே, அவன்கள்! கிராமம் தவறாமல் ஆயிரக்கணக்கில் இருக்கிறான்களே! ரொம்ப செல்வாக்காச்சே அவன்களுக்கு? நீங்கள்தான் செய்தேன் என்று அவன்களுக்குத் தெரியுமோ ?''

"போடீ பித்துக்கொள்ளி! எனக்கா தெரியாது? எதை எப்படிச் செய்யவேண்டுமோ, அப்படிச் செய்வேண்டீ! ஸ்ரீராமபிரான் சுக்ரீவன் உதவியைக் கொண்டுதானே அவன் சகோதரனான வாலியைக் கொன்றார்? விபீஷ்ணர் உதவியைக் கொண்டுதானே அவன் சகோதரனான ராவணனை கொன்றார்? அதேமுறையைத்தான் நானும் கையாண்டேன்.”

"இந்தக்காலத்தில் அந்த மாதிரிப் பேர்வழிகள் எப்படிக் கிடைத்தார்கள், உங்களுக்கு?"

"இந்தக்காலம் வேறே, அந்தக் காலம் வேறேயோ! எல்லாம் ஒண்ணுதாண்டீ! ஓமாந்தூர் ரெட்டியிருக்கிறா ரோன்னோ, அவரைப் பிடிச்சு மிரட்டித்தான் உத்தரவு போடச்சொன்னேன்! சும்மா சொல்லப்படாது! பயந்த மனுஷன்! நம்பௗவாகிட்டே ஒரு தனிவாஞ்சை. பக்திகூட! நம் "மந்தி" பத்திரிகை கூனிவாசன் இருக்காரோன்னோ, அபார வேலை செய்திருக்கார்! இந்த மந்திரிகள் காதைப் பிடிச்சு நன்னா; அழுத்தித்திருகி ஒரு உழக்கு ரெத்தம் எடுத்துட்டார். அதுகளெல்லாம் அவரைக் கண்டால் நடுங்கிச் சாகிறதுகள்!''

"சரி! அடுத்தபடி என்ன செய்யப்போறேள்? அந்த ஈரோட்டுப் பேர்வழி காந்தி மாதிரி ஏதேனும், முரட்டுத்தனமாக எதிர்க்க ஆரம்பிச்சுட்டா என்ன செய்யறது?”

"ஆமாண்டி! அவர் ஒரு மாதிரி ஆசாமிதான்! எந்தச் சமயத்தில் என்ன செய்வார் என்பதே தெரியாதுடீ! அந்த ஒரு ஆள் மட்டும் இல்லாட்டீ! அடாடா! பாக்க சூத்திரப் பெரிய மனுஷாளையெல்லாம் ஒரு நிமிஷத்திலே ஏமாற்றிப்பிடலாமே! நம்பளவா பத்திரிகையிலே நாலு வார்த்தை புகழ்ந்து எழுதினாலே அவன்களிலே பாதித் தலைவன்களுக்கு உச்சி குளிர்ந்து போகுமே! அப்புறம் செத்த நாய் செருப்பைக் கடிச்சமாதிரி வெறுமனே கிடக்குங்கள்! ஆனால் இந்த மனுஷன்தான் எதிலும் ஏமாற மாட்டான்.

"அப்படீன்னா என்ன செய்யப்போறேள்?''

"அதெல்லாம் நேக்குத் தெரியுண்டீ! அவளுக்குள்ளேயே நேருக்கு நேர் முட்டிக்கொள்ற மாதிரி ஒரு வேலை செய்து வெச்சிருக்கேன். அது பலிச்சுடுத்தோ, அப்புறம் நம்ப ராஜ்யந்தான்."

''அரு சரி! இந்த தந்திரத்தைக் கண்டு பிடிச்சிண்டு அவாள் எல்லோரும் ஒண்ணு சேர்ந்துட்டா, அப்புறம் நம்ம கதி?."

''அதுதானே சேரமாட்டான்கள்! அவன்களுக்கு அந்தப் புத்தியிருந்தால் இந்த நாட்டிலேயே நம்பளை நுழைய விட்டிருப்பான்களோ? போடீ! பைத்தியக்காரி! அவன்களை ஒண்ணு சேரவிடுவோமா நாம்? அதுதானேடீ நம்ப காயத்ரீ! நித்ய ஜெபம்! "பிரித்துவை! பிரித்துவை! பிரித்துவை!'' இந்த மூலமந்திரத்தைப் பிராமணன் என்றைக்கு மறக்கிறானோ, அன்றே அவன் வெளியே வேண்டியதுதான்... அது சரி! சோமபானம் எங்கேடி? என் சொகுசு சுந்தரி கொண்டுவாடீ, சீக்கிரம்"!

ஆ.வி. அம்மாமியும் க.கி. கோமளமும்!

“வாருங்கோ, அம்மாமி! சௌக்கியம்தானே! என்ன சாவகாசமா காலை நீட்டிப்போட்டுண்டு ஏதோ மென்னுண்டு இருக்கேளே! எனக்குக் கொஞ்சம் தாங்களேன்!'' 

"வாடியம்மா கோமளம்! வயசாயிடுத்துன்னா காலே நீட்டிப்போட வேண்டியதானேடீ! ஒன்னாட்டம் நானென்ன, சிறுபெண்ணா! சரி உங்க ஆத்திலே என்ன ஒரே கும்மாளமா இருந்தது. மத்தியானம்? உன் தங்கை புஷ்பவதியாகியிருக்காளோ!'' 

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, அம்மாமி! அவள் புஷ்பவதியாகி எத்தனையோ மாசம் ஆயிடுத்தே! எங்கம்மா ஒரு வைதீகக் குடுக்கையோன்னோ! கல்யாணம் பண்றதுக்கு முன்னே புஷ்பவதியாயிட்டாளம்! அடுத்த பங்குனியில் கல்யாணத்தை முடிச்சுப்பிட்டு அதற்கப்புறம் புஷ்பவதியான தாட்டமா வெளிச்சிக்கலாம்; அது வரையிலே வெளியே சொல்ல வேண்டாம்; என்று பிடிவாதம் பிடிச்சாள், அவள் இஷ்டப்படியே விட்டுட்டோம், நீங்கள் கூட மனசிலே போட்டு வையுங்கோ! இந்தக் காலத்திலே கூட நம்பவாளிலே சில வைதீகப் பிச்சுக்கள் இருக்கே! என்ன பண்ணித் தொலையுறது?'
 
''அப்படியா கோமளம்! நன்னா சொன்னே போ! நான் யாரண்டே சொல்லப்போறேன்! ஆமாம்! வேறென்ன விசேஷம் உங்க ஆத்திலே?"
 
"காலையிலே பேப்பரைப் பார்த்தோம். நமக்கெல்லாம் ஒரு சந்தோஷமான சேதி வந்திருக்கு, அம்மாமி!'' 

''இனி என்ன சந்தோஷம் கிடக்கு, நம்பளுவாளுக்கு! அதுதான் பிராமணனுக்கு வேலையோ, படிப்போ கிடையாதுண்ணு செய்து விட்டான்களே, இந்த காங்கிரஸ் ராஜ்யத்திலே! காங்கிரஸ் - காங்கிரசுண்ணு தொண்டையைக் கிழிச்சுண்டு கத்தினாளே! நம்பகிட்டு ஒருவருஷமா அலையா அலைஞ்சான். சர்க்கார் வேலையே கிடைக்கலே! தலையிலெழுத்து, பாவம்! பஸ் கண்டக்டராயிருக்கானாம். சேலத்திலே! பி.ஏ. பாஸ் பண்ணிட்டு பஸ் கண்டக்டராண்டீ! அதைச் சொல்லிக்க வெட்கப்பட்டுண்டு எட்டாவது வரைக்கும் படிச்சதாச் சொல்லுண்டிருக்கானாம்! என்ன சுயராஜ்யம்வேண்டீருக்கு! மண்ணாங்கட்டி ராஜ்யம்!"

"அதுதான் அம்மாமி நல்ல சேதி வந்திருக்குண்ணு சொன்னேன்! நீங்க இப்போ சொன்னேளே! இந்த அக்கிரமத்துக்குக் காரணமாயிருந்தவன் ஒழிஞ்சு போயிட்டான்களாம்!'' 

"அப்படியா கோமளம்! ரொம்ப சந்தோஷம்! யார் ஒழிஞ்சிபோயிட்டா? ராஜகோபாலச்சாரியாரா?"
 
"அய்யய்யோ! அபசாரம் அபசாரம்! வாயிலே போட்டுக்குங்கோ அம்மாமி! அவர்தானே நம்மையெல்லாம் காப்பாற்றுகிறவர்! கலிகால் மகாவிஷ்ணுவோன்னோ , அவர்! அவரும் நெருக்கியும் கோபால்சாமி அய்யங்காரும் இல்லாட்டிப்போனா நம்பளவா சர்க்கார் ஆபீஸ் பக்கமே எட்டிக்கூடப் பார்க்க முடியாது அம்மாமி!'' 

"னேக்கு இந்த எழவெல்லாம் என்ன தெரியறது? ஏதோ கிருஷ்ணா - ராமான்னு காலத்தைக் கழிச்சூண்டிருக்கேன்! யார் ஒழிஞ்சு போயிட்டாண்ணு சொல்றே!?''
 
"சொல்றேன், கேளு அம்மாமி! ஓமந்தூர் ரெட்டீன்னு ஒருத்தன், அவினாசிலிங்கம் செட்டீன்னு ஒருத்தன், இவன்க ரெண்டுபேரும், அடாடா! நம்பளவாளைப் படுத்தின பாடு உண்டே! சர்க்கார் உத்தியோகத்திலேயெல்லாம் அதிகமான சூத்திராளையே போட்டான் அந்த ரெட்டி! கோவில் சொத்துகளைப் படிப்புக்கும் ஆஸ் பத்திரிக்கும் செலவு செய்யணுமின்னு சொன்னான், இன்னொரு ஆசாமி என்ன செய்தான் தெரியுமோன்னோ! காலேஜ்களிலே நம்ப பையன்களுக்கு இடமில்லாமல் பண்ணீட்டான். ஸ்கூல்களிலெல்லாம் குறள் படிக்கணுமாம், குறள்! ஒரு கீதை, ஒரு வேதம், இவைகளைப் படிக்கலாமே குறளாம்! குறள்! இந்தச் சனியனை நம்பளவாளிலே யாரானும் படிப்பாளோ? இதைக் கட்டாயமாய்ப் படிக்கணும்மின்னு சொன்னான்! என்ன ஆச்சு தெரியுமோ? இந்த இரண்டு பேருக்கும் மந்திரி வேலை போச்சு! போச்சு, அம்மாமி, போச்சு! போயே போயிடுத்து!" 

''அப்படியாடி கோமளம்! என் வயிற்றிலே பாலை வார்த்தேடீ இவ்வளவு அநியாயக்காரர்களுக்கு வேலை போகாமே என்ன செய்யும்! பிரமணாருக்குத் தீங்கு செய்தவாள் உருப்படியாகியதாக எங்கேயானும் படிச்சிருக்கியோ! மகாத்மா காந்தியைக் கூட நம்பளவன் தானே சுட்டுக் கொன்றானாம்! பாவம்!''
 
"பாவமா! என்ன அம்மாமி, பாவம்,..... கிடக்கு! இந்த ரெட்டியார் இன்னிக்கே தன் சொந்த கிராமத்திற்குப் போறாராம்! பேப்பர்லே போட்டிருக்கா! செட்டியாரும் இந்த வாரத்திலேயே தன் ஊருக்குப் போயிடுவார்! இதைவிட நல்ல சேதி நமக்கு வேறென்ன அம்மாமி வேணும்? அதுக்காகத்தான் இன்னிக்கு வடை பாயசத்தோட விருந்து சாப்பிட்டோம்! ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி விருந்து சாப்பிட்டு, போன வருஷம் 31 ந்தேதி யன்னைக்குத்தான் இந்த மாதிரி விருந்து சாப்பிட் டோம்! அதற்கப்புறம் இன்னைக்குத்தான்! உங்க ஆத்துக்குக்கூட லட்டும், பாயாசமும் அனுப்பிச்சேனே! சாப்பிட்டேளோ! நம்மைப் பிடிச்ச பீடைகள் ஒழிஞ்சுது அம்மாமி இனிமேல் யார் மந்திரியா வந்தாலும் பரவாயில்லே! நாம் சொன்னபடி கேட்குங்கள்! இரண்டு காக்காயைக் கொன்னு ஒரு குச்சியிலே கட்டி வச்சுபிட்டா அதற்கப்புறம் நெல்லைத் திங்க காக்காய் வருமா அம்மாமி! இந்த காக்காய் கூட்டத்துக்கு இப்படி தான் புத்தி கற்பிக்கணும்! மவுன்ரோடிலேயும், மயிலாப்பூரிலேயும் இருக்கிற நம்ப பெரியவாளெல்லாம் தீர்க்காயுசா இருக்கணும்!''
 
6.9.1949 'விடுதலை'

பூசுரர் இனமில்லையே!

"அரசியல் நிர்ணயசபைக்கு வேறு சில நிபுணர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஆலோசனை கூறும் விதத்தில், காங்கிரஸ் பத்திரிகையொன்றில் வந்துள்ள கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

''சென்னை சட்டசபை அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்போகும் 49 பெயர்களில் காங்கிரஸ் அல்லாத கீழ்க்கண்டவர்கள் பெயர்களைப் பற்றியும் கவனிக்க வேண்டும். டாக்டர் லட்சுமணசாமி முதலியார்; பி. ராமச்சந்திர ரெட்டி; ஸர். ஆர்.கே. ஷண்முகஞ்செட்டி; ஸர். எ. இராமசாமி முதலியார். தகுதியைப் பொருத்தமட்டில் இவர்களும் சேர்க்கப்படுவது நல்லது''.

இதை எழுதிய பேர்வழி சுத்தம் கர்நாடகம் போலிருக்கிறதே! 'தகுதி'யாமே தகுதி! பசங்களைப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதில் "தகுதி" அவசியம் என்றால், பூணூல் பசங்களுக்கு 'லக்' அடிக்கும்! அதற்காகச் சொன்ன தகுதியை இதில் போட்டுக் குழப்புகிறாரே!

300 பேர்களுக்குமேல் இருக்கும் அரசியல் நிர்ணய சபையில் இதுகளையெல்லாம் விட்டால் தலைக்குத்தலை ‘நொச்’  ‘நொச்’ சென்று ஏதாவது பேசிக்கொண்டேயிருக்குமே! இதுகள் உலகத்திலே பார்த்ததையும் கேட்டதையும், தினம் 10 புஸ்தகத்திலே படித்ததையும் அங்கே சொல்லித் தொலைக்குமே! 385 பேரில் 380 பேருக்கு ஒரு சனியனும் புரியாதே!

தொலைஞ்சாலும் தொலையட்டும்; ஒண்ணு ரெண்டைப் போட்டு வைக்கலாமென்றால், ஒண்ணுகூடப் பூணூல் போடலையே! அதுமட்டுமா? அரசியல் நிர்ணய சபையில் 385 பேர் உட்கார்ந்திருக்கும்போது, பண்டிட் நேரு எழுந்து பிரசங்கமாரி பொழிந்து விட்டு உட்கார்ந்ததும் அவர் பேசியது சரியோ, தப்போ, எல்லோரும் கை தூக்க வேண்டுமே, ஒரே சமயத்தில்! முன்னேயும் பின்னேயுமாகத் தூக்கினால் தவறு செய்தவர் காந்தியாரின் "ராம் துன்" பஜனைக்கு ஒரு மாதம் போய் ஒரே நேரத்தில் தாளம் போட்டுப் பழக வேண்டும்! இந்த நிபந்தனைக்கு உட்பட்ட ஆசாமிகளாகப் பொறுக்கியெடுத்தால் நல்லதா? அதை விட்டு அந்தராத்மாவின் பெருமையைப் பேச வேண்டியவர்கள் கூடிய இடத்தில்; அரசியல் சிக்கல்களைப் பேசித் தொலைக்குங்கள், இதுகள்!

இந்த 5-6 பேர்களைப் போட்டுவிடுவதாகவே வைத்துக் கொள்வோம். 385ல் பாக்கி எத்தனை? ஒரு தொட்டி உப்புத் தண்ணீரில் 6 சொட்டுத் தேன் விட்டால் தண்ணீர் முழுதும் இனிக்கப் போகிறதா, என்ன?

Friday, March 15, 2019

ஜோதியில் கலந்தார் காந்தி!

"அவர் செத்துப்போனார்" என்று சொல்வதோ, எழுதுவதோ மங்களகரமாயில்லை என்று சொல்வார்கள்! செத்துப்போவதில் 'மங்களகரம்' எப்படியிருக்குமோ எனக்குத் தெரியாது! சாவு வீட்டில் சிரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கலாமல்லவா? "அவர் சிவலோக ப்ராப்தியடைந்தார்" "இவர் இறைவன் திருவடி நீழலிற் சேர்ந்தார்'', "அவர் திருமால் திருவடியிற் கலந்தார்'', "இவர் துஞ்சினார்", "அவர் இறுதியான தூக்கத் திலாழ்ந்தார்''.
இப்படியெல்லாம் இறந்தவரைப் பற்றி  மங்களகரமாகச் சொல்வதுதான் சிறந்தது என்கிறார்கள்!

கள்ள மார்க்கெட் வியாபாரத்தில் ஊர்க் கொள்ளையடித்து, பலர் பணத்தைச் சுரண்டிப் பெரும் பணக்காரனாகி, உல்லாச வாழ்வு வாழ்ந்துவிட்டு உயிர் நீத்த ஒருவனை "இறைவனை திருவடி சேர்ந்தார்" என்றால், அது உண்மையா? அவர்கள் நம்பிக்கைப்படியே கூறுவதானால், ராம.சோம.பெரி.அழ.முருகு.கரு. காருண்ய செட்டியார் பங்குனி மாதம் 15-ந் தேதியன்று காலை 7 மணிக்கு திடீரென்று நரகக்குழியில் வீழ்ந்துவிட்டார்' என்றல்லவா எழுத வேண்டும்? (எந்த மதத்துக்காரரானாலும் இப்படித்தானே எழுதவேண்டும்? கள்ள மார்க்கெட்காரருக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை லாப காரர்களுக்கும் இறைவன் திருவடியில் இடங் கிடைப்பதென்றால், அந்த இடம் சென்னை ட்ராம் கார்களை விட அதிக நெருக்கடியாகவல்லவோ இருக்க வேண்டும்? இறைவனும் (காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத்தைப் போல) கள்ள மார்க்கெட்காரர்களுக்கு அபயம் தருகிறார் என்றல்லவா ஏற்பட்டுவிடும்?

இறந்து போனவர்கள் இறைவன் திருவடிக்கே நேராகப் போனாலுஞ்சரி, அல்லது போகிற பாதையில் நரகத்தில், (அதாவது தென் இந்திய ரயில்வே மூன்றாம் வகுப்பு வண்டியில்) கொஞ்ச நேரம் தங்கியிருந்து விட்டுப் போனாலுஞ்சரி! அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை! ஆனால் இறந்தவர் எப்படியிறந்தார் என்பதை மறைக்கவே கூடாது!

ஒருவர் குளத்தில் வழுக்கி விழுந்து இறந்து போயிருக்கலாம். இன்னொருவர் வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கலாம். மற்றொருவர் இந்தத் காலத்து டாக்டர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டாண்டியாகி, அதைவிட இறந்து போவதே நல்லது என்று நினைத்து, தன் சந்ததியார்கள் நன்மையைக் கருதி செத்துப் போயிருக்கலாம்! எப்படியானாலுஞ்சரி, மரணத்தின் காரணத்தை மறைப் பானேன்?

ஆனால் நம் கல்வியமைச்சர் அவர்கள் இதில் கருத்து மாறுபாடு கொண்டவராய்த் தெரிகிறது! இவர் சென்னை முத்தையா செட்டி பெண் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றிருந்தாராம். ஒரு வகுப்பில் அன்றாடச் செய்திகளைத் தொகுத்து எழுதியிருந்தார்களாம். அவைகளில் ஒன்று, "காந்திஜி கொலை வழக்கு" என்பது பற்றியதாம். இதைக் கண்டாராம், கல்வி அமைச்சர். உடனே திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் வாய்மை என்பது பற்றிய குறளடிகள் நினைவுக்கு வந்தன போலும்!

"காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார் என்பதையே நாம் மறந்துவிட வேண்டும்; அதை யாருக்கும் கற்பிக்கக்கூடாது" என்று கூறினாராம்!

ஏனய்யா மறந்துவிடவேண்டும்? கல்விக்கரையைக் கண்ட அமைச்சர் அவர்களே, ஏன்? பிரிட்டிஷ் மன்னன் முதலாவது சார்லஸ் என்பவன் ஜனநாயகத்தினால் தூக்கிலிடப்பட்டான் என்பதை மறந்துவிட்டதா உலகம்?
சாக்ரட்டீசுக்கு நஞ்சு தந்து கொன்றார்கள், கிரீஸ் நாட்டுக் கயவர்கள், என்பதை மறந்து விட்டதா, உலகம்? அப்ரஹாம் லிங்கன் துரோகி ஒருவனால் கொல்லப்பட்டான் என்பதை மறந்து விட்டதா, உலகம்? சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் மேலிடத்தின் துரோகச் செயலால் நாட்டை விட்டு ஓடி, எங்கேயோ அநாதியாக மாண்டார் என்பதை மறந்து விட்டதா, உலகம்? ஹிட்லர் எதிரியிடம் கைதியாயிருப்பதைக் காட்டிலும் இறப்பதே நல்லது என்ற முடிவால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மறந்து விட்டதா, உலகம்?
காந்தியாரை கோட்ஸே என்ற பார்ப்பனன் மதவெறி காரணமாகக் கொன்று விட்டான், என்பதை நாம் ஏன் மறக்கவேண்டும்? அந்த மதத்தில் பிறந்திருக்கும் அவமானத்திற்காகவா? அதற்காக உண்மையை மறைக்கலாமா? யோசித்துப் பாருங்கள்!

இப்போதேதான் அநேகமாக எல்லோருமே மறந்து விட்டார்களே! கோழி திருடிகளும் கூடக் குலாவி, கோரமான அந்தப் படுகொலையை அடியோடு மறக்குமாறு செய்து, சாம்பல் கரைப்பு விழாவும் செய்துவிட்டார்களே!

இனி, அடுத்தபடி காந்தி புராணம் எழுத வேண்டியது தானே பாக்கி. அதில் இராமலிங்க அடிகள் நடராஜ ஜோதியில் கலந்தது போலவும்,

"காந்தியார் ஜோதியில் கலந்துவிட்டார்! இறைவனே கோட்ஸே உருவத்தில் வந்து அவரது அபார சேவையை மெச்சி, தம் பாதார விந்தத்துக்கு அழைத்துச் சென்றார்" 

என்று எழுதவேண்டிய ஒன்றுதானே பாக்கி! 1948-ல் நடந்த சம்பவத்திலேயே இவ்வளவு பித்தலாட்டாம் என்றால், பண்டை நாட்களில் அசுரர்களைப் பற்றி கூறியிருப்பதெல்லாம் எவ்வளவு தூரம் "காங்கிரசா"யிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்!

இருப்பு உலக்கையா வேணும்

"என்னாங்க, உங்களைத்தானே! அப்பளமா இடிக்க ஒரு நல்ல இருப்புலகை வாங்கியாங்கோண்ணு எத்தனை நாளா சொல்றேன்! சின்ன அரிவாமணையில் பூசணிக்காய் அறுக்க முடியலே! பெரிசா ஒண்ணு கடையிலேயிலிருந்து வரும்போது கந்தசாமி கோவிலண்டை இறங்கி வாங்கியாங்கோண்ணா, காதிலேயே போட்டுக்க மாட்டேங்கிறீங்களே!'

"ஏண்டி இது ரெண்டும் போதுமா? ஆப்பச்சட்டி, துடைப்பம், பிரிமணை, வரட்டி இதெல்லாம் வேண்டாமா? ஊரெல்லாம் தேடித் தேடி, கடைசியா, போயும் போயும் உன்னைப் பிடிச்சேனே! சாமான் வாங்கி சேர்க்கிறதிலே உன்னைப் போல எவளுமே இருக்கமாட்டாள்! வீடு முழுக்க சாமான்களையே பரப்பி வச்சிருக்கே! கால் வைக்க இடமில்லை பழைய இரும்புச்சாமான் விற்கும் கடைக்குள்ளே நுழைகிற மாதிரி இருக்கே ஒழிய, வீடு மாதிரியா வச்சிருக்கே? உடைஞ்ச பானையிலே நாலு, கிழிஞ்ச பாயிலே மூணு, ஓடிஞ்சு போன கரண்டியிலே ஏழு, ஓட்டையப்போன கரண்டியிலே ஏழு, ஓட்டையாப்போன தகர டப்பாவிலே ஓம்பது! இத்தனையும் போத தேண்ணு, இன்னொரு அரிவாமணை, இருப்புலக்கை, கல்உரல் ஏதாவது கேட்டுகிட்டே இருக்கியே!''

"அதற்கென்ன செய்யறது? குடித்தனம் பண்றதுன்னா சும்மாவா? சாமான் சட்டு இல்லாமே முடியுமா?

"போடி! போ! பொல்லாக் குடித்தனம் பண்ணிப்பிட்டே! பெரிய பெரிய வியாபாரி வீட்டிலே கூட இவ்வளவு சாமான் இருக்காதே! இந்தச் சுண்டைக்காய் மளிகைக்கடை வச்சிருக்கும் என் வீட்டிலே பாரு! மூர்மார்க்கெட் பின்பக்கம் மாதிரியே இருக்கு! வியாபாரத்திலே திடீரென்று ஏதோ கஷ்டமோ நஷ்டமோ ஏற்பட்டால் (பகவான் புண்ணி யத்திலே அப்படி ஒண்ணும் வராது) அவசரத்தில் இந்த ஊரை விட்டு வேறு ஊருக்குப் போகக்கூட முடியாது! உன் இருப்புலக்கையையும், உரலையும், அம்மியையும், ஆட்டுக் கல்லையும் விட்டுட்டா வருவே?"

"அப்படி ஊரைவிட்டு நாம் ஏன் ஓடப்போறோம்? நல்ல லாபம் வந்துகிட்டு இருக்கிறப்போ அதைப்பற்றி ஏன் நினைக்கிறீங்கோ?''

''நஷ்டம் வந்தால் தான் ஓடணுமா? பெருத்தலாபம் வந்தால் கூட ஓடவேண்டியதுதான்! இந்த ராஜ்யத்திலே ஓடினவனுக்குத்தாண்டி ஒன்பதாம் இடத்தில் குரு! அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி! தெரியுமாடீ! கோயமுத்தூரிலே நடந்த ஒரு சங்கதியைக் கேளுடீ? ஜவஜீபாய் அப்ரலால் பட்டேல் என்று ஒரு வடக்கத்தியான் இருந்தான் லட்சக்கணக்கில் பெருத்த வியாபாரம் செய்துகிட்டு இருந்தான். வரி போடுகிற ஆசாமிகளையெல்லாம் பச்சை நோட்டாலே அடிச்சுகிட்டே 10 வருஷமா காலந் தள்ளிகிட்டு வந்தான். இந்த வருஷம் திடீருண்ணு 17,000 ரூபாய் இன்கம்டாக்ஸ் போட்டுட்டாங்க! என்ன பன்னினான் தெரியுமாடீ? நம்ம ஆளுன்னா 2 லட்சம், 4 லட்சம் இன்கம்டாக்ஸ் போடுட்டா மனசு நொந்து போயிடுவாங்க அவனுக்கென்ன? வீடா, வாசலா? நஞ்சையா, புஞ்சையா? சொந்தமா? பந்தமா? என்ன செய்தான் தெரியுமோ? கிருஷ்ண பரமாத்மாவாயிட்டாண் டீ! திடீருண்ணு மறைஞ்சே போயிட்டாண்டீ!"

"சர்க்காருலே சும்மாவா விட்டுட்டாங்க?"

"இந்த ஊர் வியாபாரிகளையின்னா சர்க்கார் மிரட்டு வாங்க! ஜப்தீம்பாங்க! அரெஸ்ட்ம்பாங்க! வடக்கித்தியான் கிட்டேயா முடியும்? அவன்தான் இந்த ஊரிலே வந்து அவன் பாஷையிலேயே கணக்கு வச்சிருக்கானே! இதெல்லாம் அவனுகள் கிட்டே ஒன்னும் முடியாதுடீ! அதிலும் இந்த ஆசாமி பேருலே கடைசியிலே "பட்டேல்"ண்ணு வருதுடீ! ஒரு ஜீவன் அவன்கிட்டே வாலாட்ட முடியுமா? இதை எதுக்குத் தெரிமா சொல்றேன்? இருப்புலக்கை கேட்டியே! அதுக்குத்தான்! திடீருண்ணு ஓடிப்போறதுக்குக்கூட நாம் தயாராயிருக்கனும்டீ! இந்த சர்க்காரிலே அது ஒண்ணுதாண்டீ வழி! சிக்கினால்தாண்டி ஆபத்து!"

வரும்படியைப் பெருக்கும் வழி

இந்தத் தலைப்பைக் கொண்டதாக 200 பக்கத்தில் ஒரு புத்தகம் எழுதினால், உள்ளே விஷயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தலைப்புக்காக மட்டுமே பத்தாயிரம் புத்தகங்கள் விற்கும்! அந்த முயற்சியில் ஈடுபட்டுப் பல்லையுடைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பேஷாகச் செய்யலாம்!
 

அதைப் பற்றியல்ல, நான் எழுதப்போவது! கண் வைத்தியர்கள் தங்களுக்கு வருமானம் குறைவதாகப் புகார் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் மீது இரக்கப்படுவதா? வேண்டாமா? கண் பார்வை சரியாயிருப்பதானால் கண் வைத்தியர்களிடம் ' பலர் வருவதில்லை; இது மகிழ்ச்சிக்குரியதுதானே, என்று நினைக்கிறார்களா?
 

உடனே கண் டாக்டர்கள் பத்திரிகாசியர்களிடம் சரண் புகலாம். கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறு எழுத்துக்களாகத் கோர்த்து நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் பேர்களின் கண்களையாவது கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம்! (கேட்டுக் கொள்ளாமலே இந்தத் திருப்பணி இப்போது நடைபெற்று வருகிறது! எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால், 12 பாயின்ட் (Point) எழுத்துக்குக் குறைந்த எந்த எழுத்துமே வார்க்கக்கூடாது என்று உத்தரவு போட்டு விடுவேன்) பத்திரிகை நிர்வாகிகள் மட்டுமா? சினிமாக்காரர்களைத் தூண்டி விட்டு தினம் 4 காட்சிகள் காட்டச் செய்யலாம்! இந்த மாதிரி எத்தனையோ உதவிகள்!
 

வக்கீல்கள் வரும்படி குறைவதாகப் புகார் செய்தால் என்ன செய்வது?
வம்புச்சண்டைகளை வளர்த்துவிடலாம். போலீஸ்காரர்களிடம் சொல்லி வழியில் போகிறவர்களையெல்லாம் கைது செய்யச் சொல்லிப் பார்க்கலாம். நெருங்கிய நண்பர்களாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பணம் கடன் கொடுக்க ஆரம்பிக்கலாம்!
திருடர்கள் தங்கள் வரும்படி குறைந்திருக்கிறது என்று புகார் செய்தால் என்ன செய்வது?
 

இரவில் தெருக் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கலாம். கோயில் திருவிழாக்கள், கண்காட்சிகள் முதலியவைகளை அதிகப்படுத்தலாம்! பெண்களுக்கு இரவல் நகையை வாங்கிப்போட்டாவது திருவிழாக்களுக்கு அனுப்பி வைக்கலாம்! தென் இந்திய ரயில்வேக்காரர்களுக்கு எழுதி மூன்றாம் வகுப்பு வண்டிகளை இன்னும் குறைக்கச் சொல்லலாம்! ஆனால் இவர்களெல்லாம் சர்க்காரிடமே தங்கள் குறைகளைச் சொல்லிக் கொள்வார்களேயானால், சர்க்கார் இம்மாதிரி உதவிகளைச் செய்து தருவார்களா? தருவார்கள் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.
 

ஏனென்றால் தமிழ்நாடு தேவாலய அர்ச்சகர்கள் சங்க முதலாவது மாநாடு 12.11.48ல் கும்பகோணம் தாலுக்கா திருநாகேஸ்வரத்தில் நடைபெற்றதாம். அதில் கீழ்க்கண்டபடி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றதாம்.
 

“தற்காலம் ஆலயங்களில் நம் சமூகத்தினர்களுக்கு வருமானம் போதுமான அளவில் இல்லாதபடியால் அதிகப்படி வருமானம் கிடைக்கும் அளவில் வேண்டிய ஏற்பாடுகள் செய்யும்படி அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்கிறது”
 

எப்படியிருக்கிறது தீர்மானம், படித்தீர்களா? அர்ச்சகர்களுக்குப் போதுமான வருமானம் இல்லையாம்! சர்க்கார் உதவி செய்ய வேண்டுமாம்! கல்லூரிகளையும், பள்ளிகளையும் இடித்துவிட்டு கோவில்களாகக் கட்டலாம்! மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகளையெல்லாம் உடைத்து ஒரு பெரிய தேர் கட்டி வைக்கலாம்! ஆஸ்பத்திரிகளை இடித்துவிட்டு அநுமார் கோவில்கள் கட்டலாம்! அவர் சஞ்சீவி இலையைக் கொண்டு வந்து செத்தவர்களையே உயிர்ப்பிக்கக்கூடியவரல்லவா? மேலும், இப்போதுள்ள டாக்டர்கள் என்றைக்கிருந்தாலும் சாகக்கூடியவர்கள் தானே! ஆனால் சஞ்சீவி மருந்து டாக்டர் அநுமான் சிரஞ்சீவி அல்லவா? மேலும், சென்னை ரிக்ஷா வண்டி ஸ்டாண்டுகளில் முளைக்கும் சிறு செங்கல் "சாமி" களுக்குப் பதிலாக கருங்கல் சாமிகளை வைத்து அவைகளைச் சுற்றிக் கோவில் கட்டலாம்! சென்னை எழும்பூர் ம்யூசியத்தில் பல கற்சிலைகள் ("சாமிகள்") இருப்பதனால், அந்த ம்யூசியத்தை ஒரு பெரிய கோவிலாகக் கட்டி, அதற்குள் சில அர்ச்சகர்களை விரட்டலாம்! ரோடு ஓரத்திலுள்ள மைல் கற்களையெல்லாம் லிங்க உருவத்தில் மாற்றியமைத்து, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்ச்சகரை நிறுத்திவைக்கலாம்! அவைகளுக்கு "மைல் நாதர்'' என்று பெயரிட்டு, பண்டார சந்நிதிகளிடம் பணம் வாங்கி, ஸ்தல புராணம் பாடச் செய்யலாம்! திருவண்ணாமலையில் ஒரு விதவை அம்மாமி பெயரால் பல லட்சத்தில் கோவில் கட்டும்போது, மைல் கல்லுக்கு ஸ்தல புராணம் பாடுவது தவறாகுமா? அர்ச்சகர்கள் என் யோசனைகளை சர்க்காருக்கு அனுப்புவதுடன், அடுத்த மாநாட்டுக்கு என்னைத் தலைவராக வைத்தால், இன்னும் பல அருமையான திட்டங்களைச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்! 

அர்ச்சகர்கள் வருமானத்தைக் குறையும்படிச் செய்தவர்கள் யார் யாரோ அவர்களையெல்லாம் நான் கவனித்துக்கொள்கிறேன். அர்ச்சகர்களே! அஞ்சாதீர்கள். ஆனால் ஓய்வு நேரத்தில் உழுவதற்கோ கல் உடைப்பதற்கோ கற்று வையுங்கள்; என் உதவி உங்களுக்கு நிச்சயம் உண்டு.

Tuesday, March 12, 2019

அய்யங்கார் ரயில்வே!

தென் இந்திய ரயில்வே, எம்.எஸ்.எம்.ரயில்வே, மைசூர் ரயில்வே - ஆகிய மூன்று ரயில்வேக்களையும் இன்று முதல் சேர்த்து ஒன்றாக இணைத்துவிட்டார்கள். இணைக்கப்பட்ட ரயில்வேக்கு தென்பகுதி ரயில்வே என்ற பொதுப்பெயர் தரப்பட்டிருக்கிறது. இதற்கு ராமானுஜ ஐயங்கார் ஜெனரல் மேனேஜராக இருப்பாராம். அதாவது மூன்று ரயில்வேக்களுக்கும் சேர்த்து!

மூன்று கோடுகள் சேர்ந்து நெற்றியில் நிற்பதை 'நாமம்' என்கிறோம். அதைத் தரிக்கின்ற பார்ப்பனர்களை அய்யங்கார் என்கிறோம். ஆதலால் ராமானுஜ அய்யங்கார் மூன்று ரயில்வேக்களுக்கும் பொதுவான ரயில்வேக்கு மானேஜராக வருவது பொருத்தமேயாகும்! வடகலைக்குப் பதிலாக தென்கலை நாமதாரியாக இருந்திருந்தால் இன்னும் அதிகப் பொருத்தமாயிருந்திருக்கும்.

அய்யங்கார் அதிகாரமேற்கும் இந்த பட்டாபிஷேக வைபவம் இன்று மாலை நடைபெற போகிறது. இதற்கு மாமனார் (அதாவது பட்டஞ்சூட்டிக் கொள்கிறவரின் மாமனார்) கோபால்சாமி அய்யங்காரும் அவரது ‘கோட்டா' மந்திரி சந்தானமய்யங்காரும் வந்து சிறப்பிக்கப் போகின்றனர்!
ஏதோ குடும்ப விஷயம் என்று பொதுமக்கள் கருதி அலட்சியமாயிருந்து விடாமலிப்பதற்காக பலருக்கு (நான் உட்பட) அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு அய்யங்கார் அதிகாரத்தில் மூன்று ரயில்வேக்கள்! அவருக்கு மேலேயுள்ள மந்திரியும் அவர் மாமனார், உதவி மந்திரியும் மற்றொரு அய்யங்கார்! இனிமேல் என்ன குறைவு? இதற்குமேல் வேறென்ன வேண்டும்.

Great Southern Railway (G.S.R) ஜி.எஸ்.ஆர். என்று பெயரிட்டால் இன்னும் பொருத்தமாயிருக்கும் என்று மதுரை தோழர் ஒருவர் எழுதியிருக்கிறார். அவரே அதற்கு விளக்கமும் எழுதியிருக்கிறார். 'G' என்பது கோபால்சாமி அய்யங்கார். S-என்பது சந்தானமய்யங்கார் 'R' என்பது ராமானுஜ அய்யங்கார்! தோழரின் மூளை எப்படி வேலை செய்கிறது, பார்த்தீர்களா?

அய்யங்கார் குஞ்சுகளில் இனிமேல் ஒன்று கூட வேலையில்லாமல் சும்மாயிருக்காது. எல்லா உருப்படிகளுக்கும் அய்யங்கார் ரயில்வேயில் இடம் கிடைத்து விடும். மற்றவர்களுக்கு போர்ட்டர் வேலைதான் கிடைக் கும்! ‘காக்கா' பிடிக்கிறவர்களாயிருந்தால் “பாயின்ட்ஸ் மென்” வேலை கிடைக்கலாம்.

இன்று தமிழ் வருஷப் பிறப்பல்லவா? அதாவது அப்படிச் சொல்லப்படுகிறதல்லவா? இன்று அய்யங்கார் உலகத்துக்கு ஒரு புனிதமான நாள். மகாவிஷ்ணுவே அவதரித்தாலும் கூட அவரால் அய்யங்கார்களுக்கு செய்ய முடிகிறதை விட அதிகமாக இந்த முன்று அய்யங்கார்களும் செய்து விடுவார்கள்! போதாக்குறைக்கு ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவும்’ (ஹிந்து) பக்க பலமாக இருக்கிறது.

லால்குடியிலிருந்து திருச்சி ஜங்ஷனுக்குப் போய்க் கொண்டிருக்கும் ரயில்வே உத்தியோகஸ்தர் வண்டியில் நாள்தோறும் பக்க வாத்தியங்களுடன் பஜனை நடந்து கொண்டிருக்கிறது, பல ஆண்டுகளாக! இனிமேல் மைசூர் ரயில்வேயிலும், எம்.எஸ்.எம்.ரயில்வேயிலும் நடக்கும்.

விட்டலே, விட்டலே, பாண்டுரங்க விட்டலே!
கோபால விட்டலே, சந்தான விட்டலே!
ராமானுஜ விட்டலே, விட்டலே! விட்டலே!

என்று பஜனை செய்யலாம் ரயில்வே இலாகாவில் புக வேண்டுமென்று விரும்புகின்ற பக்தர்கள். 

அய்யர்கள் கூட அய்யங்கார் ஆகவேண்டிய காலம் வரப்போகிறது! ஆனால் யார் எவரானாலும் திராவிடன் மட்டும் பார்ப்பானாக முடியாதே! ஒரே நிமிஷத்தில் முஸ்லீம் ஆகலாம்! ஒரே நிமிஷத்தில் கிறிஸ்துவனாகலாம்! ஒரே நிமிஷத்தில் பவுத்தன் ஆகலாம். ஆனால் ஏழு பிறவிக்குப் பிறகல்லவா பிராமணனாக முடியும்! அதுவும் தொடர்ந்து பிராமண விசுவாசியாயிருந்தாலல்லவோ ?

ஆகஸ்ட் சுதந்திரம் யாருக்கு வந்திருக்கிறது, பார்த்தீர்களா?

விடுதலை 14.4.1951

ஆரியன் மேக்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளையும் வெறுத்து, உலகத்தையே துறந்து, ''காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா!" என்பதை உணர்ந்தும், "இருப்பது பொய், போவது மெய்'' என்று தத்துவத்தை உணர்ந்தும், ஆங்காரமும் அடக்கி, ஐம்புலனைச் சுட்டெரித்துத், தூங்காமல் தூங்கிச் சுகம் பெற வேண்டிய பக்குவ நிலையையடைந்தும், உள்ள துறவிகளே தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ‘துறவிகள் மாநாடு’ நடத்தும்போது, துறவிகளுக்குக் கூட சோதிடம் கூறி, சகுனம் பார்த்துச் சொல்லக்கூடிய அளவுக்கு மூடத்தனத்தையும் பரப்பியிருக்கும் சோதிடர்கள் மாநாடு கூடுவதில் தவறென்ன? ஆகையால் சோதிடர்களே, நவக்கிரகங்களையும் ஆட்டிப்படைக்கும் பஞ்சாங்க வீரர்களே, சோம்பேறிகளை உற்பத்தி செய்யும் 'ஆரியன் மேக்' இயந்திரங்களே! நீங்கள் ஒரு மாநாடு கூட்டுங்கள், என்று ஆலோசனை கூறுகிறேன்.

''எங்களுக்கென்ன குறைவு? அதுவும் நல்ல நேரம் பார்த்து சுயராஜ்ய பெட்டிச் சாவியை வெள்ளைக்காரனிடமிருந்து வாங்கினார்களே, தலைவர்கள்! அந்த நிமிஷத்திலேயே நாங்கள்தான் இந்த நாட்டை இனி ஆளப்போகிறோம் என்று முடிவு கட்டிவிட்டோமே! அபிசீனியாவுக்கும், இத்தாலிக்கும் சண்டை நடந்தபோது நாங்கள் எல்லோரும் அபிசீனியாதான் ஜெயிக்கும் என்று சோதிடம் சொன்னோம்; ஆனால் இறுதியில் இத்தாலிதான் ஜெயித்தது. அப்படியிருந்தும் எத்தனையோ முட்டாள்கள் எங்களைத்தானே நம்பியிருக்கிறார்கள்? இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15-க்குப்பிறகு எல்லா தென்னிந்திய பத்திரிகைகளிலும் இவ்வளவு ஜோசியப் பிரசாரம் நடக்குமா? உன்னாலும் உன் கூட்டதாலும் எங்கள் பிழைப்பை அசைக்கவே முடியாது. பஞ்சம் அதிகம் ஆக ஆக, ஜோசியப் பித்தம் அதிகமாகும். நீயும் உன் கூட்டமும் ஜோசியம் பார்க்காமலிருந்தால் எங்களுக்கென்ன? காங்கிரஸ் சர்க்கார் புண்ணியத்தில் குருட்டுத்தனம் குருத்துவிட்டு வளர்கிறது. எங்களுக்கு மாநாடும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்!'' என்று சோதிடர்களில் சிலர் கூறலாம்!

இது உண்மையாயுமிருக்கலாம். ஆனால் சர்வ வல்லமையுள்ள சர்க்கார் கூட தற்காப்பு விஷயத்தில் முன் ஜாக்கிரதையாயில்லையா? கடவுள்கூட தனி அறைக்குள்ளிருந்து கொண்டு வெளியே பூட்டுப் போடச் சொல்கிற இந்த நாளில், நீங்கள் அலட்சியமாயிருக்கக் கூடாது; யானைக்கும் அடிசருக்கும். ஆகையால் நீங்கள் ராஜாஜி மண்டபத்தில் (எங்களுக்குத்தான் அங்கே கூட்டம் போட இடம் கிடைக்காதே தவிர, எம்.எஸ்.க்கும், உங்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் பிறகுதானே மற்றவர்களுக்கு) ஒரு மாநாட்டைக் கூட்டுங்கள். பேச்சு கீச்சு வேண்டாம். கருப்புச் சட்டைக்காரன் திடீரென்று அங்கே வந்து தொலைப்பான். இரண்டு கைகளையும் மூடிக்கொண்டு, "ஏ, சோதிட நிபுணர்களே, இந்தக் கைக்குள் என்ன இருக்கிறது? இதில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டுத் தொலைப்பான். அண்ணன் ஜாதகத்தையும் தங்கை ஜாதகத்தையும் கொண்டு வந்து இரண்டுக்கும் திருமணப் பொருத்தம் பார்க்கச் சொல்வான்! உங்களில் ஒருவருக்குக்கூட அதைக் கண்டுபிடிக்கத் தெரியாது என்ற இரகசியம் சோதிடங்கேட்கும் மூடர்களுக்குத் தெரியாதேயொழிய சுயமரியாதைக்காரனுக்கு நன்றாகத் தெரியுமே! ஆகையால் பிரசங்கமே வேண்டாம்.

கீழ்க்கண்ட ஒரே ஒரு தீர்மானத்தை மட்டும் நிறை வேற்றி விட்டு மாநாட்டைக் கலைத்து விடுங்கள். மிகமிக முக்கியம். உங்கள் தொழிலையே பாதிக்கக் கூடியது!  உங்கள் வயிற்றில் ஒரு வண்டி மண் விழும்படியான விஷயம். அலட்சியமாகயிருக்காதீர்கள்!

தீர்மானம் ''ஜாதகம் கணிப்பதில் நல்ல திறமையுடைய என் தகப்பனார் என் ஜாதகத்தை எங்கேயோ அலட்சியமாக வைத்துவிட்டார்; பிறகு என் பிறந்த தினம்கூட யாருக்கும் தெரியவில்லை. எனக்கும் இன்றைக்குக்கூடத் தெரியாது; ஒரு நாள் போல மற்றொரு நாளும் நல்லதாகும்". என்று மே. த. ராஜகோபாலாச்சாரியாரவர்கள் கூறியிருப்பதனால் ஜாதகமேயில்லாதவருக்கு கவர்னர் ஜெனரல் வேலையை கிடைத்திருக்கிறதே என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றி, ஜாகத்தில் நம்பிக்கை போய்விடுமாதலாலும், இதனால் சிறுபான்மையோர் பிழைக்க வழியில்லாமல் பிச்சையெடுக்க வேண்டி ஏற்பட்டு விடுமாகையாலும், இந்த உண்மையை வெளிப்படையாகக் கூறிய நாஸ்திகராகிய கவர்னர் ஜெரனல் கூறியதை இம்மாகாண சோதிடர் மாநாடு நவக்கிரக சாட்சியாக மிகமிக வன்மையாகக் கண்டிக்கிறது."

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு எனக்கு அதன் நகலை அனுப்புங்கள்.
அலட்சியமாயிருக்கக்கூடாது! ஆச்சாரியார் வெகு ஜாடையாக சோதிடத்தின் பித்தலாட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்! அவர் பலே கைக்காரர், ஒரே கல்லில் இரண்டு காய் அடிப்பவர்!

"ஜாதகமேயில்லாத நான் இந்தியாவிலேயே மாபெரும் பதவியையும், புகழையும் அடைந்திருக்கிறேனே. வெறும் தகர டப்பாக்களாகிய நீங்கள் ஜாதகத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்களே! உங்கள் மூளையை பாரிசில் தான் சலவை செய்யவேண்டும்!'' என்று அர்த்தப்படும் படியாக அவர் கூறியிருக்கிறார்!

ஆகையால் அயர்ந்து விடாதீர்கள். ஆரூட நிபுணர் களே அலட்சியமாயிருந்தீர்களோ, வெகு சீக்கிரத்தில் நீங்களெல்லோரும் கையில் கூடையும், மண்வெட்டியும் எடுக்க வேண்டிய நிலைமை வந்துவிடும்!

கள் குடிக்கவும் கூடாது, விற்கவும் கூடாது என்பது போல, சோதிடம் கூறவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று சட்டமியற்றும் சர்க்கார் ஒன்று வருவதாக வைத்துக்கொள்ளுங்கள்! (அந்த மாதிரி ஒரு பெரிய நாடே இருக்கிறது என்பது பற்றி ‘சோதிடாலங்காரம்’ என்னும் நூலிலும், ‘சோதிடக்களஞ்சியம்’ என்னும் நூலிலும் ஏதாவது இருக்கிறதா?) அப்போது நீங்களெல்லோரும் என்ன செய்வீர்கள்?

தயவு செய்து உங்கள் ஜாதகங்களை ஊன்றிக் கணித்து பனிரெண்டு மாதப் பலன் எழுதி வையுங்கள்! எங்கே பார்க்கலாம்! அடுத்த ஆண்டு இதே மாதத்தில் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கப்போகிறதோ? பார்க்கலாம்!

நானும் உங்கள் ஜாதகங்களை எழுதி வைத்திருக்கிறேன். இப்போது சொல்லமாட்டேன். உங்களைப் போலவே, நடந்தபிறகுதான் சொல்லப்போகிறேன்! நானும் ஒரு ‘மாஜி குட்டி ஜோசியர்’ அல்லவா?

Monday, March 11, 2019

பூனையும் அதன் குட்டிகளும்

இடம்: கும்பகோண மகாமளக் குளத்தின் படிக்கட்டு
காலம் : அதிகாலை 5 மணி
பாத்திரங்கள் : பூனைக்கண் அய்யங்காரும் அவர் மகன் ஆஞ்சனேயனும் 

***

ஆஞ்சனேயன்: அப்பா, நீ என்னதான் சொல்றே? என்னை ஏன் கட்டாயப்படுத்துறே? சர்க்காருக்கு விரோதமா கலவரஞ் செய்கிற கட்சியிலே இருந்தா சர்க்கார் சும்மா விடுவாளா? பட்டேலும், நேருவும் பேசியிருக்கிறதைப் படிச்சியேன்னோ? கட்டாயம் எங்களை அடியோடு ஒழிச்சுட்டுத்தான் மறுவேலை பார்க்கப்போறதா சொல்லிப்பிட்டாளே! இனிமேல் நான் அவாளோட சேரவேமாட்டேன்.

பூனைக்கண் அய்யங்கார்: போடா, மண்டு! நோக்கு என்ன தெரியும்? நீ சின்னப் பயல்தானே. நேருவாவது, பட்டேலாவது? நானா இந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயப்படுகிறவன்? நாங்களெல்லாம் பெரிய 'ப்ளான்' போட்டு வேலை செய்கிறோம்டா! நான் சொன்னபடியே செய்யடா, போ.

ஆஞ்ச: என்னப்பா, இந்த மாதிரி சொல்றே. 2 வருஷத்துக்கு முன்னே காங்கிரஸ், காங்கிரஸ்னு அடிச்சிண்டே, ரெண்டு வருஷமா ஹிந்து மகா சபைன்னு சொல்லிண்டிருக்கே. ஆனால் என்னை மட்டும் ஆர்.எஸ்.எஸ்.லே சேர்த்துட்டு நம்ப சர்க்காரோடே சண்டைக்குப் போகச் சொல்றே! நீ மட்டும் இங்கிலீஷ் படிச்சுட்டு வக்கீல் தொழில செஞ்சிண்டிருக்கே; ஒண்ணுக்கொ முரணாயிருக்கே!

பூனை: நம்ப சர்க்காரா? எதுடா நம்ப சர்க்கார்? போடா முட்டாள். நானா முன்னுக்குப் பின் முரணா நடக்கிறேன்? நோக்கு லோக விவகாரம் தெரிஞ்சான்னா? நம்பளவாளிலே பெரியவாளெல்லாம் கூடி ஒரு முடிவு செஞ்சிருக்கோம். ஒரு பிரம்மாண்டமான இரகசியத் திட்டம் போட்டிருக்கோம். இப்படி கிட்ட வாடா, யாராவது கேட்டுண்டிருக்கப் போறா! வெள்ளைக்காரனை விரட்ட ணுமின்னு சொன்னோமே, எதுக்காகத் தெரியுமோ? அவன்களோடெ படிப்பு, ஆசாரம், நாகரீகம் எல்லாம் வந்துதான் சூத்திரன்களுக்கு நம்மிடமிருந்த பக்தி, பயம், மரியாதை இதெல்லாம் குறைய ஆரம்பிச்சுது. நாம் எதையெதையெல்லாம் அற்புதம், கடவுள் லீலைகள், விதியின் விளையாட்டு என்று சொல்லி வந்தோமோ அவைகளையெல்லாம் விஞ்ஞானக் கல்வியின் மூலம் அவன் பாழாக்கிட்டான். அவனும் நம்மை தனக்கு பிரயோஜனப்படுத்திண்டானே தவிர, நம்மிடத்தில் பயமோ, பக்தியோ இல்லாமலே இருந்தான். ஆகையால் அவனை ஒழிச்சோம். இப்போது சுயராஜ்யம் கிடைத்துடுத்து. இதை எப்படியாவது ஹிந்து ராஜ்யமாக்க வேண்டும். பழைய பீஷ்வாக்கள் ராஜ்யமாக ஆக்கப் போறோம். அதுக்காகத்தான் ஹிந்து மதத்தை சர்க்கார் நிர்வாகத்தின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் புகுத்தீண்டே இருக்கோம். நல்ல வேளை பார்த்து சுதந்தரம் வாங்கச் சொன்னோம். தேங்காய் உடைத்து பூஜை செய்து முதல் கப்பலை மிதக்க விடச் செய்தோம். தெரிஞ்சுதா, நன்னா கவனீடா!

ஆஞ்ச: அப்படீன்னா, இந்த சர்க்காரை நாமெல்லாம் ஆதரிக்க வேண்டாமா?

பூனை: அவசரப்படாதேடா! மத்திய சர்க்காரைப் பொறுத்தமட்டில் அங்கே துலுக்காள் - ஹிந்துக்கள் சண்டை அதிகமோன்னோ; அங்கே நம்ப ஹிந்து ராஜ்யத்திற்கு விரோதமாயிருக்கிறவன் யாராயிருந்தாலுஞ்சரி, அவன் எவ்வளவு பெரிய மகாத்மாவானலுஞ்சரி, அவனைத் தீர்த்துக் கட்டிப்பிடுவா நம்பளவா. இங்கே, நம் மாகாணத்தைப் பொறுத்தவரையிலே சொல்றேன், கேள். இனிமேல் காங்கிரசுக்குள்ளே பிராமணாளுக்கு இடமே இல்லை! ஆனானப்பட்ட ஆச்சாரியாரையே துரத்தி விட்டான்களே, இவன்கள்? பாக்கிப் பேரை மட்டும் விடவா போறான்கள்? அதனால் தான் சூத்திரப்பயல்கள் நிறைஞ்சுபோன காங்கிரசை விட்டு நாங்கள் விலகீண்டோம் வெளிப்படையாக ஏதோ ஆதரிப்பதுபோல் வேஷம் போடுவோமே தவிர, உள்ளூர அதைக்குழி தோண்டிப் புதைப்பது தான் எங்கள் திட்டம். அதற்காகத்தான் உங்களை ஆர்.எஸ்.எஸ். இல் சேர்த்துவிட்டு நாங்கள் பின்னாலிருந்து வேலை செய்துண்டிருக்கோம். நாம் எடுத்த காரியம் எதுவும் வீணாய்ப் போனதில்லை. தெரியுமா? இதோ, பார்! இந்த சர்க்காருக்கும் திராவிட கட்சி ஆள்களுக்கும் சிண்டு முடிஞ்சு விட்டுட்டோம்.  நம்ப ஊரிலேயே நன்னா நாயடிக்கிறாப்போலே அடிச்சான்களா, இல்லையா, அந்த திராவிட கட்சிக்காரன்களை! இனிமேல் இவன்களெல்லாம் சென்னை சர்க்கார்மேல் பாய்வான்கள், அவாளுக்கும் இவன்கள் மேல் கோபம் வரும்! இரண்டு ஆடுகளும் மடார் மடார் என்று எம்பி எம்பி முட்டிக்கொள்ளுப் போகுதுகுள்! இரத்தம் சொட்டும்; நாம் வாழை இலைத் தொன்னையில் பிடித்து வயிறு நிறையக் குடிக்கப்போறோம்.

ஆஞ்ச: நாம்தான் இவ்வளவுக்கும் காரணம் என்பது என்றைக்காவது தெரியாமலா போய்விடும்? தெரிஞ்சண்டா, அப்புறம் நாம் என்ன செய்யறது?

பூனை : அதுதானே நடக்காது. இராமாயணத்திலே படிச்சதில்லை, நீ? வானர சேனையும் ராட்சத சேனையுந் தான் கோடி கோடியாக செத்து மடிஞ்சுதே தவிர, நம்பளவா ரிஷிகளிலே யாருக்காவது ஒரு தாடி மயிராவது உதிர்ந்ததாகப் படிச்சிருக்கியா? பரம்பரை பரம்பரையாய் நம்பௗவா இதிலே கைதேர்ந்த நிபுணாள் என்பது நோக்குத் தெரியாதோ? நோக்கு அனுபவம் போதாதுடா! இந்த ஹிந்தி விஷயத்தைத்தான் பாரேன்! ஒரு அவினாசி, ஒரு பக்தவச்சலம், ஒரு மாதவ மேனன், ஒரு அண்ணாமலை, ஒரு வேதரத்தினம், ஒரு சொக்கலிங்கம், ஒரு காமராஜன் - இந்த மாதிரி அவன்களையேதானே தயார் பண்ணிவிட்டு, இந்த திராவிடக் கட்சிக்காரன்களைத் திட்டச் செய்திருக்கிறோம். நம்பளவாளிலே வைத்திநாதய்யரோ, மந்திரி ராஜனோ, பாஷ்யமய்யங்காரோ, ரா. கிருஷ்ண மூர்த்தி அய்யரோ, ஹிந்து 'சீனுவாசய்யங்காரோ', 'தினமணி' சிவராமய்யரோ, யாராவது ஹிந்தி எதிர்ப்புக்காரன்களோடே மோதுகிறார்களா, யோசித்துப் பாரு! அவனுக ஜாதியைச் சேர்ந்த போலீசை விட்டே அவன்களை அடிக்கச் சொல்றோமே, பார்த்தியா? இதுதாண்டா சாமர்த்தியம்! அந்தப் பயலுகள் போட்டி போட்டுண்டு கோவில் கட்டினா, நாம் அதைப் பிடிச்சுக்குவோம்! அவன்கள் கஷ்டப்பட்டு குளம் வெட்டினால் நாம் அதில் குளிப்போம்; வெட்டின பயல்களையே அதில் குளிக்க விடமாட்டோம்! நம்மை ஜெயிக்க யாராலும் முடியாதுடா. இந்தப் பயலுகள் ஒண்ணு சேராமல் மட்டும் நாம் வெகுஜாக்கிரதையா பார்த்துக்கணும், தெரிஞ்சுதா? சரி, நேரமாச்சு. நீ போய் நான் சொன்ன காரியத்தை முடிச்சுகிட்டு அப்புறம் ஸ்கூலுக்குப் போ. ஆமா, மகஜரிலே கையெழுத்து வாங்கீட்டியோ? சீக்கிரம் கட்டும்! 4-5 பேருகிட்டே வாங்கினால் போதும். மிச்சக் கையழுத்தெல்லாம் நீயும், நானுமே போட்டுடலாம்!

(கும்பகோணத்தில் மட்டுமல்ல; எந்த ஊரிலும் அக்கிரகாரத்தில் இந்த மாதிரிப் பேச்சுத்தான். அக்கிரகாரப் பூனைகள் ராஜபாளையம் நாய்களைப்பற்றி இந்த மாதிரிப் பேசிக்கொண்டிருக்கின்றன! பகிரங்கமாய் அல்ல; படிக்கட்டுகளில் அமர்ந்து!)

காஃபியும் கல் கடவுளும்

''ஓய், காஃபியாரே? கொஞ்நாளா உம்பாடு யோகமாய்த்தானிருக்கு, உம்மைப் பார்ப்பதே அபூர்வமாயிருக்கே! சுதேச மன்னர்கள் கூட இப்போது சாதாரணமாக நடமாடுகிறார்கள், உமக்குத்தான் ரொம்ப கிராக்கி வந்திருக்கிறது! அதுமட்டுமா? நீர் இந்நாட்டுக்கு வந்தது முதல் என்னை யாருமே லட்சியம் செய்வதில்லையே!"

"கல் கடவுளாரே! அற்பனாகிய என்னைக்கண்டு தாங்கள் கூட இப்படிப் பொறாமைப்படலாமா? நான் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும், என் தரிசனம் எவ்வளவு அபூர்வமாயிருந்தாலும் தங்களைப் பொறுத்தமட்டில் நான் ஒரு தீண்டப்படாதவன்தானே. தங்கள் தலைமீது புழு பூச்சிகள் கூட, நெளிகின்றன. ஆனாலும் என்னை ஏற்றுக்கொள்ள மட்டும் மறுக்கிறீர்களே, நியாயமா? என் காலடியில் கிடக்கும் அந்தப் பயல் பால் என்பவனை மட்டும் குடகுடமாக ஊற்றிக்கொள்கிறீர்களே! நான் உள்ள இடங்களிலெல்லாம் இந்தப் பால் என்னிடம் தஞ்சம் அடைகிறான். நான் வந்த பிறகு இவன் ஊரிலேயே அகப்படவிடாமல் அழித்து, ஒழித்துவிட்டேன். 4 மாடுகள் கறக்கும் வீட்டிலே தாராளமாக குடிப்பதற்கு பால் கிடைக்க முடியாதே, தெரியாதா? என் பெயரால் உள்ள நிலையங்களில் அத்தனை பாலையும் கொண்டுபோய்ச் சேர்த்து விடுவார்களே. எனக்குப் பிறகுதானே, அந்தந்த வீட்டுக் குழந்தைகள்! அப்படிப்பட்ட என் அடிமையை, தாங்கள் தலையில் ஊற்றிக்கொண்டு கெளரவப்படுத்தலாமா? நீங்களே சொல்லுங்கள், கல்கடவுளாரே!

''காஃபியாரே நீர் சொல்வது ரொம்ப நியாயந்தான் அதற்கு நான் என்ன செய்வது? என் பக்தர்கள் அத்தனை பேரும் சர்வ முட்டாள்கள்! சுயநலக்காரர்கள்! அவர்கள் மட்டும் நவீன வாகனங்கள் வைத்துக்கொள்கிறார்கள். புதுசு புதுசான உடை உடுத்துகிறார்கள்; உணவு உண்கிறார்கள். எனக்கு மட்டும் எல்லாம் பழைய மாதிரியே தான் இருக்க வேண்டுமா? எனக்கும் ஒரு சூட், ஷர்ட், கோட், நெக்டை, ஹாட், பூட்ஸ், சிகரெட் முதலியவைகளைத் தரக்கூடாதா? அவர்கள் குளோப்ஜாமூன், பாதாம்கீர், பிஸ்கட், ஓவல்டின், காஃபி எல்லாம் சாப்பிடும்போது நான் மட்டும் பழைய சம்பாக் கட்டியையும் சர்க்கரைப் பொங்கலையுமே சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? அதுதான் போகட்டும். ஒரு நாளாவது இவைகளை எதையாவது என் நாக்கில் தொட்டுத் தடவியிருப்பார்களா, இப்பாவிகள்? எல்லாம் என் தலையில் தானே ஊற்றித் தொலைக்கிறார்கள்! அல்லது காலடியில் வைத்துக் காட்டிவிட்டு எடுத்துப்போய் விடுகிறார்கள், என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எல்லாம் அவன் செயல். காஃபியாரே, உங்கள் ஜாதகமே தனி ஜாதகம். மங்காத புகழ் அடைந்து விட்டீர்கள். எத்தனையோ உணவுப் பண்டங்கள் இருந்தாலும் உங்கள் பெயரால்தானே (காஃபி கிளப்) உணவு நிலையங்களுக்குப் பெயர் வைக்கிறார்கள்! என் பெயரோ, காந்தி பெயரோ, எப் பேர்ப்பட்டவர் பெயரும் எங்கேயோ அபூர்வமாகத்தானே இருக்கிறது. உங்கள் யோகமே யோகம்! என்னை இந்த நாட்டில் உண்டாக்கிய என் அருமைக்குழந்தையாகிய பிராமணர்கள்கூட காயத்ரி ஜபத்தை விட்டாலும் காஃபியை விடமாட்டார்களே! காந்தி கூட வெள்ளைக்காரனை விட அதிகமாக உங்களை வெறுத்தாரே! ஆனால் அவர்களைத்தான் விரட்ட முடிந்ததே தவிர, உங்களை அசைக்க முடிந்ததா? பிராமணர்களும் நீங்களும் ஒரே சக்தி படைத்தவர்கள்! வெறும் காட்டுக் கூச்சல் போடலாமே தவிர, இருவரையும் யாராலும் அசைக்கமுடியாது! சரி, ஒரு விஷயம் கேள்விப் பட்டீர்களா?”

"என்ன விஷயம், கல் கடவுளாரே? நமக்கு எவனாவது எதிரி கிளம்பியிருக்கிறானா? யாரவன்? சொல்லுங்கள்? ஒரே நொடியில் ஒழித்துவிடுகிறேன்.''

"இந்தியாவின் நகர்ப்புறங்களுக்காக என்று ஆண்டுதோறும் மேலும் 313 லட்சம் டன் பால் உற்பத்தி செய்வதற்காக 5 ஆண்டுத்திட்டம் ஒன்று தயாரிக்கப் பட்டிருப்பதாகவும், அதற்கு சுமார் 55 கோடி ரூபாய் செலவாகுமென்றும் விவசாய மந்திரி தவ்லத்ராம் டில்லி பார்லிமென்ட் கூட்டத்தில் பேசியிருக்கிறாரே; தெரியுமா?"

"ஹஹஹ! அற்ப மானிடப் பதர்! வேத காலத்து சோம பானத்தையருந்திய பரம்பரையின் ஆசிர்வாதத்தைப்பெற்று; பல குடும்பங்களின் இரத்தத்தைக் குடித்து, இந்த நாட்டு சர்க்கரையையும், பாலையும் என் காலின்கீழ் போட்டு மிதித்து, என்னை விரோதிப்பவர்களுக்குத் தலை வலியையும் தூக்கத்தையும் உண்டாக்கி, குடிவகைகளின் மன்னனாகவும், சர்வாதிகாரியாகவும் விளங்கிவரும் என்னிடமா இந்தச் சவால்? அது முடியாது! 313 லட்சம் டன் பால் அல்ல; ஆயிரம் கோடி டன் பால் தானாகட்டுமே! 55 கோடி ரூபாயல்ல, இந்திய சர்க்காரின் வருமானம் முழுவதுமே 308 கோடி ரூபாயையுமே - வேண்டுமானாலும் பால் உற்பத்திக்காகச் செலவிட்டுப் பார்க்கட்டுமே! முடியுமா? ஒரு ஏழைக் குழந்தை வாயில் ஒரு சொட்டுப் பால் ஊற்ற விடுவேனா? நான் யார் என்பது இந்த அற்ப இந்தியர்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் அந்த மந்திரியைக் கண்டால் சொல்லுங்கள்! (நான் காண்பதுண்டுதான்; ஆனால் அவரை மதித்துப் பேசத் தயாராயில்லை) 'இந்த நாட்டில் மருந்துக்குக்கூட ஒரு சொட்டுப் பால் கிடைக்காமல் செய்வதுதான் என் இறுதி லட்சியம். அதை நிறைவேற்றாமல் நான் சாகப்போவதில்லை'யென்பதைச் சொல்லுங்கள்!''

"ஆஹா! அப்படியே சொல்கிறேன், காஃபியாரே! நானும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன். எவ்வளவு அதிகமாக உற்பத்தி செய்தாலும் விகிதாச்சாரம் என் தலைக்கு வந்து சேராமலா இருக்கும்! என் பக்தர்கள் ரொம்பவும் நல்லவர்கள். புத்திக்கு எப்போதுமே ஓய்வு கொடுத்திருப்பவர்கள்! நாம் இருவரும் இறுதிவரையில் ஒற்றுமையாயிருந்தால், இந்தப் பால் என்ற வெள்ளையனை இந்த நாட்டைவிட்டே விரட்ட முடியா விட்டாலும், இந்த நாட்டு மக்கள் வாயிலேயே படாமல் செய்து விடலாம். வெற்றி நமதே! பால் ஒழிக! காஃபியார் வாழ்க!''

"கல் கடவுளாரும் நீடூழி வாழ்க!'' என்று வாழ்த்துக்கூறினார், உயர்திரு காஃபியார்!

Saturday, March 9, 2019

மாஜி மஞ்சள் பெட்டிகள் மகஜர்

கார்மேகக் கருணை நிறைந்த வருணனே! நமஸ்தே !

 இந்த மகஜரை உங்கள் முன்பு சமர்ப்பிக்கின்றோம். நாங்கள் நிரபராதிகள். அதாவது நன்மையோ, தீமையோ எதுவும் செய்யாதவர்கள். செய்யவே தெரியாதவர் கள். உங்களிடங்கூட உண்மையை மறைக்கலாமா? எங்களுக்கு வாய்ச்சவடால் அடிக்கவும், பேனாமுனை போனபடி எழுதவுந்தான் தெரியும். வேறெதுவும் செய்து பழக்கமேயில்லை. கட்டிய வீட்டுக் கோளாறு சொல்லியே காலங்கடத்தி விட்டோம். ஒரு செங்கல்லைக் கூடக் கையால் தொட்டு அறியோம். இடையிடையே கொஞ்சம் அழிவு வேலையும் பழகியுள்ளோம். ஆகையால் சுவரை இடித்துத்தள்ள முடியாவிட்டாலும் வீணாக்கவாவது தெரியும். வெட்கமின்றி உங்களிடம் உண்மையைக் கூறுகிறோம்.

நாங்கள் அந்தக் காலத்தில், எங்களுக்கிருந்த அவசரத்திலும், ஆத்திரத்திலும் எதை எதையோ புளுகிவிட்டோம்!

நாட்டில் தேனும், பாலும் ஆறாக ஒடும் என்றோம். இன்று பணம் கொடுத்தால் கூட ஒரு அவுன்ஸ் சுத்தத்தேனோ, சுத்தப் பாலோ கிடைப்பதில்லை.

வரிகளையே அடியோடு ஒழித்துக் கட்டப்போவதாகச் சொன்னோம். இன்று இனிமேல் போடக்கூடிய புது வரியைப் பற்றிச் சொல்கிறவர்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசு தரக்கூடத் தயாராயிருக்கிறோம்.

அன்று தற்குறித்தனத்தை ஒரே நொடியில் (காளி கம்பன் நாக்கில் எழுதியது போல) ஒழிக்கப்போவதாகச் சொன்னோம். இன்று ஆசிரியர் கிடைக்கவில்லை; பள்ளிகளில் இட மில்லை; புதுப்பள்ளி கட்டப் பணமில்லை. ஆரம்பப் பள்ளி மூடுவிழா கூட நடத்தி வருகிறோம்!

அன்று ஜாதிகளை ஒழிக்கப் போவதாகத் தம்பட்ட மடித்தோம்! இன்று பட்டியலில் இடம்பெறவேண்டிய ‘வோட் டர்கள்' தங்கள் ஜாதிகளைக் குறிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறோம்.

அன்று கார்டு விலையைக் காலணாவாக்கப் போவதாகச் சொன்னோம். இன்று அதைப்பற்றி நினைவூட்டுகிறவைனக் கண்டாலே அடிவயிற்றைக் கலக்குகிறது.

இந்த மாதிரியே இன்னும் 700 உதாரணங்கள் சொல்ல முடியும். ஆனால் பல நாடுகளுக்குச் செல்லவேண்டிய தங்களுக்குத் தொல்லை தரக்கூடாதேயென்று கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.

எங்கள் பரிதாபமான நிலைமையைக் கண்டு தாங்களாவது மனமிரங்கி பேருதவி புரிய வேண்டும். தாங்களும் இச்சமயம் எங்கள் காலை வாரிவிடுவது முறையல்ல, பகவானே!

நாங்கள் அந்தக்காலத்தில் உறுதி கூறிய அனந்த கோடி விஷயங்களில் தங்களைப்பற்றிய விஷயமும் ஒன்றுண்டு.

மாதம் மும்மாரி பொழியச் செய்வோம், என்று சொல்லித் தொலைத்தோமல்லவா? ஆனால் நாங்கள் வந்தது முதல் மழை பன்னீரைவிட அபூர்வமாயிருக்கிறதே! நீங்களுமா இப்படி எங்களை எதிர்பார்ப்பது? புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் மண்டையுடைக்கும் வெய்யில் இதற்கு முன்பு இருந்ததேயில்லையே. பயிர் பச்சையெல்லாம் வாடுகின் றனவே. கொஞ்சம் கிருபை செய்யக்கூடாதா? ரஷ்யாவைப்போல, அமெரிக்காவைப் போல, ஆஸ்ட்ரேலியாவைப் போல நாங்கள் பலாத்காரத்தில் இறங்குகிறோமா? அந்த நாட்டார்களெல்லாம் விமானத்தில் ஏறிச் சென்று மேகங்களை விரட்டி பனிக்கட்டிகளையும், மருந்துகளையும் தூவி மழை பெய்யச் செய்கிறார்களே! அப்படியெல்லாம் நாங்கள் செய்வதில்லையே; நாங்கள் (தங்கள் விஷயத்திலாவது) அஹிம்சாவாதிகளல்லவா? தங்களுக்குத் தெரியாதா? பிராமணர்களை விட்டு வருண ஜெபம் பண்ணச் சொன்னோமே. அதையும் தாங்கள் அலட்சியப்படுத்தி விட்டீர்களே! தாங்கள் கூடவா சூனாமானா ஆகிவிட்டீர்கள்?

 தயவுகூர்ந்து இந்த ஒரு விஷயத்திலாவது எங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு அருள் புரிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். போனது போகட்டும். இனிமேலாவது கொஞ்சம் மழை பெய்யுமாறு செய்யுங்கள். இந்த உதவியை என்றும் மறக்கமாட்டோம். வேண்டுமானால் மத்திய சர்க்காரில் மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில் தங்களை ‘மழை மந்திரி’யாக நியமிக்கச் சொல்கிறோம்! அங்கு எவ்வளவோ பணம் கொள்ளை போகிறதே; அதில் தங்களுக்கு கொடுப்பதிலா குறைந்துவிடப்போகிறது! அது மட்டுமல்ல, மோட்டாரில்லாத சட்டசபை மெம்பர்களுக்குக் கிடைக்கும் பெட்ரோல் கூப்பன்களில் வேண்டுமளவு தங்களுக்குத் தருகிறோம். அவைகளை நீங்களும் காலன் ஒன்றுக்கு 6 ரூபா 8 ரூபா வீதம் கள்ள மார்க்கெட்டில் விற்றுக் கொள்ளலாம்! எங்கள் தயவிருந்தால் நீங்கள் என் றும் பிழைத்துக் கொள்ளலாம். தங்களை மிரட்டுவதாகத் தயவு செய்து நினைத்து விடாதீர்கள். ஜெய் ஹிந்த்!

தங்கள் பதிலைச் செய்கை மூலம் விரைவில் பார்க்க விரும்பும்…

மாஜி மஞ்சள் பெட்டிகள்
(காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் 1946ல்)

Friday, March 8, 2019

அருமையான ஆலோசனை

மதுரை பிராமண இளைஞர் சங்கத்தின் சார்பில் நடந்து வரும் 'காயத்ரி' என்ற ஏட்டின் டிசம்பர் 1964 தலையங்கம் பகுதியில் வந்துள்ள பகுதியை நம் இயக்க நண்பர் ஒருவர் அனுப்பியுள்ளார். (அவருக்கு நன்றி) அது இது:

"புதுக்கோட்டை பிராமண அபிவிருத்தி சங்கத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு இறுதி உரையாற்றிய, திருச்சி முன்னாள் மாவட்ட நடுவர் திரு. எல்.எஸ்.பார்த்தசாரதி அய்யர், பிராமண சமூகம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மேலும் கூறியவற்றுள் சில: இது மாதிரி பிராமண சங்கங்கள் நாடெங்கும் பெருக வேண்டும். பிராமண சிறுவர்களுக்கு எட்டு வயதிற்குள் பூணூல் போட வேண்டும். அவர்கள் விடியற்காலை எழும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். பெண்களை எஸ்.எஸ்.எல்.சி.க்கு மேல் படிக்க வைக்கக்கூடாது. அவர்கள் மத சார்பில்லாத சினிமாக்களை பார்ப்பதிலிருந்து தடுக்க வேண்டும். பெண்கள், வீட்டிற்கு அவசியமான அப்பளம் போடுதல் முதலிய வேலைகள் செய்து தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்''

மாவட்டத்தின் நீதிபதி பதவியிலிருந்த ஒருவர் மார்பு வடத்தின் அவசியம் பற்றி இப்படிப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. தம் பேச்சை அப்படியே யாரும் கேட்டு நடக்க மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாததல்ல, அவர் சொன்ன இரண்டொன்று நடந்துகொண்டுதானிருக்கிறது. எட்டு வயதில் எல்லா அக்கிரகாரக் குஞ்சுகளுக்கும் பூணூல் மாட்டித்தான் விடுகிறார்கள். ஆனால் அது சாவி மாட்டிக் கொள்ளத்தான் பயன்படுகிறது. ‘காயத்ரி’ வேண்டுமா? காஃபி வேண்டுமா? என்று கேட்டால் அக்கிரகாரம் முழுவதுமே காஃபிதான் முக்கியம் என்று ஒரு மனதாகக் கூறிவிடும்.

விடியற்காலையில் எழுகின்ற பழக்கத்தை எந்த பார்ப்பனச் சிறுவனுக்கும் புதிதாகச் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. தங்கள் பெற்றோர்களைப் பார்த்து அதன்படியே நடந்து கொள்வார்கள்.

காலஞ்சென்ற கைவல்ய சாமியார் என்னிடமும், பொன்னம்பலனார், S.V.லிங்கம் போன்றவர்களிடமும் அடிக்கடி ஒன்று சொல்வார்:

"இந்தப்பா, பார்ப்பானை ஒழிக்க உங்களால் முடியாதப்பா. அவன் 2000 வருஷமாக அதிகாலை 5 மணிக்கு முன்பே எழுந்து குளிரிலும், மழையிலும் கூடக் குளிர் தண்ணீரில் முழுகிவிட்டு, படிக்கவேண்டியதைப் படித்து தன் ஜாதியையும், தன் மதத்தையும் உயர்த்தி வைத்திருக்கிறானப்பா. நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் அவனை இறக்க வேண்டுமானால் 2000 வருஷமாவது அப்படிச் செய்ய வேணுமப்பா! நீங்கள்தான் வெய்யில் காலத்தில் கூட காலை மணிக்கு ‘பெட்காஃபி’ குடித்து விட்டு இழுத்துப் போர்த்தித் தூங்கிவிட்டு 9 மணிக்கு வெந்நீரில் குளிக்கிற சோம்பேறிகளாயிருக்கிறீர்களே! நீங்கள் எப்படியப்பா அவனை ஒழிக்கப்போகிறீர்கள்?" (நீங்கள் என்றது நம் இனத்தாரையே பொதுவாக).

ஆகையால் அதிகாலையில் எழுவது என்பது தொழிற்சாலை முதல் 'ஷிஃப்ட்' வேலைக்குப் போகிற தொழிலாளி மாதிரி அக்கிரகாரக் குஞ்சுகள் அத்தனைக்கும் இரத்தத்தில் ஊறிப்போனப் பழக்கம்.

ஆயிரம் பெண்களில் 900க்குத் திருமணம் ஆகாமலிருப்பதற்குக் காரணமென்ன? பெண்களும் படித்துவிட்டு எல்லாத் துறைகளிலும் புகுந்து சம்பாதித்துக் கொண்டி ருக்கிறார்களே! இவர்களை நோக்கி, ‘வீட்டில் உட்கார்ந்து அப்பளம் போடுங்கள்’ என் றால், இது என்ன, ‘கைராட்டினக் கிராக்’குக்குத் தம்பி போலிருக்கிறதே! இந்தக் காலத்தில் அப்பளமாவது, முறுக்காவது?

“வெள்ளை முக்காடு எங்காவது இருந்தால் தேடிப்பிடியுங்கள்! நாங்களென்ன, மலையாளத்து நாயர்களா. அப்பளம் போட? சமையலுக்கு புதுப்புது 'குக்கர்'கள் வந்துவிட்ட பிறகு, ஷோக்காய் ஆஃபீசுக்குப் போய் விசிறி அடியில் அமர்ந்து பேனா பிடித்து, மாதம் 100, 200, 300 என்று சம்பாதிப்பதை விட்டுவிட்டு அப்பளக்குழவியை உருட்டிக் கொண்டிருக்கச் சொல்கிறாரே, இவர்?
இவர் மட்டும் தர்ப்பை-பஞ்சாங்கத்தை உதறிவிட்டு வக்கீல் வேலைக்குப் படித்து இங்கிலீஷை விற்று, பேனா பிடித்து எழுதி, ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிச்சாரே. நாம் மாத்திரம் ஏன் அப்பளம் போடணும்?” இப்படித்தான் கேட்பார்கள், அக்கிரகாரத்து நாரிமணிகள்! ஆகவே இது நடக்காத காரியம்.

இனி, சினிமா பார்க்கக்கூடாது என்பது பெரிய வெடிகுண்டு! துணியே உடுத்தக்கூடாது என்றால் கூட ஒருக்கால் சிந்திக்கலாம். சினிமாவுக்குப் போகக்கூடாது என்று பெண் உலகத்தைப் பார்த்துக் கூறுவதா? சினிமாவும், பூக்கடையும், துணிக்கடையும் பெண்குலத்தை நம்பித்தானே உயிர்வாழ்கின்றன? 'மாட்டினி' காட்சி இருப்பதே பெண் உலகத்துக்காகத் தானே! அதாவது ஆண்கள் யாவரும் ஆஃபீசில் உள்ள நேரத்தில் தொல்லையில்லாமல் சென்று வரத்தானே! எனவே, இதையும் எந்த அக்கிரகாரப் பெண்ணும் பின்பற்றத் தயாராயில்லை. “படித்த பெண்களைக் கண்டறிய பயமாயிருக்கிறது! ஆகையால் கல்லூரிப் படிப்பு வேண்டாம்" என்று முன்னாள் நீதிபதி கூறியிருந்தால் ஓரளவு உண்மையாயிருக்கலாம்.

அது கிடக்கட்டும்; அக்கிரகார அம்சாவை நோக்கி அப்பளம் போடச் சொல்வது போல், வாலண்டினாவை நோக்கி வந்தால் - வடகம் போடச் சொல்வதற்கு ரஷ்யாவில் ஒரு வார்டோ சார்டி (பார்த்தசாரதி) இல்லையே! இன்னும் பழைய பஞ்சாங்கமெல்லாம் கிழிந்து போய்விடவில்லை. பட்டம் பெற்று பூணூல் உருண்டையில் எங்கோ ஒன்றிரண்டு பறந்துகொண்டு தானிருக்கிறது!

அறிவுப்பாதை 18.12.64

களிமண்ணும் கையுமாக....

இந்த தலைப்பு என்னுடையதல்ல, இரவல், பல ஆண்டு கட்கு முன்பு, அரசியல் கிணற்றில் குதிக்காமல், பகுத்தறிவுச் சோலையில் உலவிக்கொண்டிருந்தபோது இன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் விநாயகர் வழிபாட்டைக் கேலி செய்து எழுதிய கட்டுரையின் தலைப்பு! அப்படியெல்லாம் அன்று எழுதியவர். இன்று இப்படியாகி விட்டாரே! அதன் பலன்தானே அவர் கட்சி ஆட்சியிலுள்ள சென்னை நகரசபையில் நடைபாதைப் பிள்ளையார்கள் நாளுக்கு ஒன்றாகப் பெருகிக்கொண்டிருக்கின்றன என்று வேதனைப்படுகிறவர்களில் நானும் ஒருவன்.

அரசியல் ஆசை வந்துவிட்டால் கொள்கை பறந்து போய்விடும் என்பதற்கு 'ஆயுத பூசைக்கு விடுமுறையளித்து வந்த 'ஜனசக்தி' கட்சியின் முதல், என் வீட்டில் பிள்ளையார் மாடமிருக்கிறது” என்று கூறிய தலைவர் உட்பட, சுயராஜ்யம் வந்துவிட்டால் ஒரு நொடியில் சாதியை ஒழித்து விடுவோம்" என்று அன்று கூறி, இன்று மறந்துவிட்ட அரசியல் கட்சிக்காரர் உள்ளிட்ட எத்தனையோ பேரைக் காட்டலாம், இடமில்லை . இங்கு விரித்து எழுத, அடுத்த வாரம் விநாயகன் வழிபாட்டு விழா. ஆகவே உயர்திருவாளர் நவீன விநாயகர் கூறுவதைக் கேட்போம்.

''என் பக்தர் கூட்டமே! என்னைப் போன்ற ஒரு ஆபாச உருவத்தை வழிபடுகின்ற அதிபுத்திசாலிகள் இப்பாரத மாதாவைத் தவிர, வேறு எந்த நாட்டிலுமில்லை. ஆதலால் உங்களை என் வயிற்றின் மீது உட்கார வைத்துப் பாராட்டுகிறேன். நான் 1500 ஆண்டுகளுக்கு முன்புதான் (வாதாபி சண்டைக்குப் பின்னர்) தமிழ்நாட்டுக்கு வந்தேன்.
 

ஆதலால் அதற்கு முந்தி எழுதப்பட்ட தமிழ் நூல்களிலோ, வேதங்களிலோ எதிலும் என்னைப் புகழவோ, வணங்கவோ இல்லை! புகழையும் வணக்கத்தையும் விரும்பாத மனிதனுமில்லை; கடவுளுமில்லை, ஆதலால்தான் என்னை வணங்காத நூல்களையெல்லாம் - திருக்குறள் உட்பட ஒழித்துக்கட்டுவதென்று முடிவு கட்டிவிட்டேன்.

உங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. என்னை வணங்குகிறீர்கள். ஆனால் என் வாகனத்தை அடித்துக் கொல்கிறீர்களே! இம்மாதிரிதான் என் உடன்பிறந்தான் வாகனத்தையும் கொல்கிறீர்கள்! எங்கள் தந்தையாரின் வாகனத்தையும் கொன்று தின்கிறீர்கள்! 

என்மீது இன்னமும் உங்களுக்கு முதிர்ந்த முழு பக்தி ஏற்படவில்லை . அரசாங்க ஆஃபீஸ்களிலும், ஆஸ்பத்தரிகளிலும், பங்குகளிலும், வீடுகளிலும், நடைபாதைகளிலும், பஸ்களிலும், ரயில்வே ப்ளாட்ஃபாரங்களிலும் மட்டுந்தானே வைத்திருக்கிறீர்கள்? (இதற்காக இதோ, பாரத் மாதாகி ஜே! ஜெய் ஹிந்த்!) ஆங்காங்குள்ள மலங் கழிக்கும் அறைகளிலும் வைத்தாலென்ன? மலம் கழிப்பதிலும் எந்த "விக்னமும்" (கேடும்) இல்லாமல் காரியம் நடக்குமல்லவா?
'

அடுத்த குற்றச்சாட்டு, இப்போதெல்லாம் பிள்ளையார் சுழி போடாமல் பல பேர் எழுதி வருகிறீர்கள், அதனால்தான் கள்ளக்கணக்குகள் இரண்டொரு சமயங்களில் சிக்கிக் கொள்கின்றன. இனிமேல் பிள்ளையார் சுழி ("உ") போடாமல் எதையுமே எழுதாதீர்கள். மாணவர்கள் என் சுழியை விடைத்தாள் தலைப்பில் போட்டுவிட்டு, வெறும் காகிதத்தை மடித்துக் கொடுத்தாலுங்கூடத் தேர்வில் வெற்றி பெறுவார்கள்! என் சுழியைக் கடிதத்தின் மேலே போட்டுவிட்டு விலாசம் எழுதாமலும், ஸ்டாம்ப் ஒட்டாமலும் தபாலில் போட்டுப் பாருங்கள்! உரிய இடத்துக்கு உடனே போய்ச் சேர்ந்துவிடும். சந்தேகப்பட்டால் நாத்திகர்களாவீர்கள்! நம்பிக்கையோடு செய்யுங்கள்!
 

ஒரு எச்சரிக்கை! மாட்டுச்சாணியைப் பிடித்து வைத்து, 'பிள்ளையார்' என்கிறீர்களே, இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பக்தி மிகுதியினால் மற்ற உயிர்களின் (மனிதன் உட்பட) சாணி வரையில் இதே கற்பனையை நீட்டிவிடாதீர்கள்! இன்னொரு பெருங்குறை! தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கை வரவரப் பெருகிக் கொண்டிருப்பது எனக்குப் பெருத்தமானக் கேடாயிருக்கிறது. எதற்காக இவர்களுக்கு தண்டச் சம்பளம்?
 

பாலும் தெளி தேனும், பாகும் பருப்பும் கலந்து எனக்குத் தந்து கொண்டேயிருந்தால் நான் உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் (வட நாட்டு இந்திவாலா, சீனநாட்டு சீனி வாலா, பிறநாட்டு இங்கிலீஷ்வாலா உட்பட) ‘சங்கத் தமிழ் மூன்றும்’ நொடிப்பொழுதில் தந்துவிடமாட்டேனா?
 

பழங்காலத்துப் புலவர் பாடிய இப்பாடல் இக்காலத்துக்கு ஏற்றதல்ல என்பதுகூட என் கருத்து, ‘சங்கத் தமிழ்’ மாத்திரந்தானா எனக்குத் தெரியும்? இங்கிலீஷ், இந்தி, உருது, துருக்கி, ப்ரெஞ்ச் போன்ற எல்லா மொழிகளையும் தருவேனே! நீங்கள் மட்டும் முறையாக எனக்குத் தேங்காய் உடைத்துக் கொண்டிருந்தால் போதும்!
 

மற்றொரு நீண்டகாலக் குறை! எங்கள் பிள்ளையார் சாதியிலும் ஏழை பணக்காரர்களை உண்டாக்கி விட்டீர்களே! நானே மரத்தடியிலிருக்கின்ற போது பன்றிவந்து என்மீது தேய்த்துக்கொள்கிறது. நாய் சிறுநீர் கழிக்கிறது! ஆனால் நானே மண்டபத்துக்குள் அல்லது மலை உச்சியில் இடம் பெற்றுவிட்டால் எனக்கு எவ்வளவு உபசாரம் நடக்கிறது! இந்த உயர்வு தாழ்வு இருக்கலாமா, இந்த சோஷலிச நாட்டில்? ஆட்சியாளருக்கு இந்த என் வேண்டுகோளை அனுப்பி வைக்கிறேன். பிள்ளையார் சுழி போட்டு!
 

முடிவாக, ஒரு வார்த்தை, மெய்யன்பர்களே! சுயராஜ்யத்துக்குப் பிறகு என் மீதுள்ள உங்கள் பக்தி பத்தாயிரம் மடங்கு வளர்ந்திருப்பதனால், இனிமேல் உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளெல்லாம் என்னைப்போலவே பிறக்குமாறு அருள்செய்ய என் அப்பாவை வேண்டிக் கொள்கிறேன்."

அறிவுப்பாதை 4.9.64

அடித்தார் அடிகளார்!

இயக்க நண்பர் சென்னை தேவராசன் எழுதியுள்ளார்; அதன்பிறகுதான் நானும் படித்துப் பார்த்தேன். பொங்குகிறார், தேவராசன் அடிகளார் மீது!
அப்படியொன்றும் மோசமாகப் பேசவில்லையே அடிகளார், அவர் பேசியிருப்பது:

"சாக்ரட்டீசை நாடு தெரிந்து கொண்டுள்ள அளவிற்கு, இங்கர்சாலை நாடு தெரிந்து கொண்டுள்ள அளவிற்கு, நமது அப்பர் அடிகளைத் தெரிந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம், தமிழர்கள் நன்றி கொன்றவர்களாகப் போனார்கள்...... ஏதாவதொரு புதிய கருத்து, புதிய சித்தாந்தம் என்றால், சாக்ரட்டீஸ் சொன்னார். இங்கர்சால் சொன்னார், பிளாட்டோ சொன்னார் - என்று சொன்னால்தான் நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற ஒரு மனோபாவம்! அத்தகைய ஒரு நெறி வளர்ந்திருக்கிறது.

இங்கர்சால், பிளாட்டோ, சாக்ரட்டீஸ் போன்றவர்களை விட சமுதாய சீர்திருத்தத்துக்கு தகுதியுடைய பெரியார் அப்பர் அடிகள் என்பது என்னுடைய நம்பிக்கை ...

அப்பரடிகள் வரலாறு ஒரு சோதனை நிறைந்த வரலாறு. அவர் சமண - பவுத்த நாகரீகம் பரவியிருந்த காலத்தில் அந்த நாகரீகத்தை எதிர்த்துப் போராடினார். சமண பவுத்த சமயங்களால் தமிழிசை அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்காக அவர் ஒரு பேரியக்கமே நடத்தினார்.”


(தென்றல் திரை 14.10.64, பக்கம் 2) இப்படியாக அடித்தார், 64 ஆவது நாயன்மாராக அவதரித்துள்ள இக்கால அடிகளார்  (திருச்சி தேவர் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவில்).

பெரியார் சென்னையில் ஒரு முறை வர்ணித்தபடி, "ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் குன்றக்குடி அடிகளார்” அவர் கள், இன்றைய கருஞ்சட்டைகளை நோக்கி இப்படிக் கூறுகிறார் என்றே கொள்ளலாம்.

இக்கால பவுத்த சமணர்களாக வந்துள்ள சைவசமய - இந்தமத – எதிர்ப்பாளர்களே, அன்று செய்ததுபோல் இன் றும் ஆட்சியாளரின் துணைகொண்டு உங்களைக் கழுவேற்ற முடியும்; கழுவேற்றப் போகிறோம். இப்போதுதான் உங்கள் கொள்கைகளையெல்லாம் உங்கள் கண்முன்பு தூக்கில் மாட்டித் தொங்கவிட்டிருக்கிறோம். எங்கள் அடுத்த வேலை. அன்று எண்ணாயிரம் சமணர்களை சைவம் செய்த வேலைதான்.

அக்கால அப்பர் அடிகள் இக்கால வினோபாபவே மாதிரிக் கால்நடையாக நடந்து சைவ மத எதிரிகளை ஒழித்துக்கட்டினார். “ஆனால் இக்கால அப்பர் (குன்றக்குடி) அடிகளான நான், சுற்றி வந்து சைவத்தைப் பாதுகாத்து வருகிறேன். நாத்திகப் பெரியார் வாயினாலேயே "ஸ்ரீலஸ்ரீ மகா சந்நிதானம்" என்ற சொற்களை வரவழைத்த ஒரே சைவத் தலைவர் யான்” இப்படிச் சொல்லலாம், குன்றக்குடி அடிகளார் அவர்கள். ஆனால் ஒன்று, நாத்திகப் பெரியாரின் இயக்கத் தலைநகரமாகிய அதே திருச்சியில் பேசிய இதே பேச்சில் 1964 அப்பர் அடிகள் கூறியிருக்கிறார். படியுங்கள்:

"கழனிகளிலேயே களை பிடுங்க இறங்குகிறவன் முதலில் களை எது, பயிர் எது, என்று தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையானால் பயிரை களை என்று கருதி பிடுங்கிவிடுவான், இறுதியில் விவசாயிக்கு எதுவும் மிஞ்சாது என்று ஒரு சமயத்தில் பர்னாட்ஷா மிக அழ காகக் கூறினார்.”

போகட்டும்: சாக்ரட்டீஸ் மீதும், இங்கர்சால் மீதும், ப்ளாட்டோ மீதும் வந்த கோபம் பர்னார்ட்ஷா என்ற பச்சைத்தமிழர் மீது வராமல், களை பிடுங்குவதற்கு மேற்கோளாக அவரது பேச்சை எடுத்துக் காட்டினாரே, குன்றக்குடி "மகாசந்நிதானம்" அவர்கள், அதுவரையில் பாராட்ட வேண்டியதுதான்!

சைவ நாயன்மார்கள் பவுத்த - சமணர் என்ற களையை அன்று பிடுங்கி எறிந்தது போல் நான் பகுத்தறிவுக் கூட்டமாகிய களைகளைப் பிடுங்கி எறிந்து சைவம் என்ற பயிரைப் பாதுகாக்கப்போகிறேன். என்று திருவாய் மலர்ந்தருள்கிறீர்களா, அடிகளே! அப்படியே செய்யுங்கள் ஆனால் பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டத்துக்கு அழைத்தால் மட்டும் மறந்துவிடாதீர்கள். போவதுதான் அவருக்கும் பெருமை! தங்களுக்கும் ஒரு புதிய பிரசார மேடை!

அதுசரி, "ஆலயங்களில் தமிழ் அர்ச்சனைக் கிளர்ச்சி”என்று அடிக்கடி சொல்லி வந்தீர்களே: என்ன ஆச்சு அடிகளே! இரண்டு பெருந்தலைவர்களின் சினிமாக ஒழிப்புக் கிளர்ச்சி, ரேடியோவுக்கு லைசென்ஸ் வாங்காக் கிளர்ச்சி - இரண்டும் நடக்கும்போது இதுவும் நடக்கும் என்கிறீர்களா? ரொம்ப சரி!

ஏமாளித்தமிழன் தூங்குகிற வரையில் அவன் தொடையில் கயிறு திரித்துக் கொண்டிருப்பதுதானே தகுதி மிக்க தலைவர்களுக்கு அழகு?

தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அறிவுப்பாதை 23.10.64

Thursday, March 7, 2019

வேண்டாம் தொல்லை!

இதென்ன விபரீதம்! மாலாசின்ஹா : வைஜயந்திமாலா : பீனாராய் : பிரேம்நாத் : ராஜேந்திரநாத் : சங்கர் : ரவி : ராஜ்கபூர்

மேற்கண்ட சினிமா நட்சத்திரங்கள், சினிமா சூரியன், சினிமா சந்திரன் போன்றவர்களின் வீடுகளையும், பணிமனைகளையும் திடீரென்று மடக்கிக்கொண்டு சோதனை போட்டார்களாம்! கணக்கில் வராத ரூபாய் 30 லட்சமாம்! தங்க-வைர நகைகள்! வெளிநாட்டு மதுவகைகள்! இவ்வளவையும் கைப்பற்றியிருக்கிறார்களாமே!

டில்லி அரசாங்கம், நேருவுக்குப் பிறகு, ரொம்ப ரொம்பத் துணிந்துவிட்டது போலத் தெரிகிறதே!

இதென்ன அக்கிரமம்! இப்படியே நாடெங்கும் தொடர்ந்து செய்வதென்றால் என்னவாகும்?

தமிழ்நாட்டு சினிமா நட்சத்திரங்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை, ஒவ்வொரு பெரிய நட்சத்திரமும் பெரிய தலைவர்களில் 5-6 பேரைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது! எத்தனை கோடி ரூபாய், எத்தனை பவுன் கட்டிகள், பதுக்கி வைத்திருந்தாலும் பயமில்லை! அதிகாரிகள், கிட்டே நெருங்கமாட்டார்கள்!

லட்சம் லட்சமாக, கோடி கோடியாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் : பொது நலத் தலைவர்கள், பெரு வியாபாரிகள், தொழிற்சாலை முதலாளிகள், மிகப்பெரிய டாக்டர்கள், பெரிய கான்ட்ராக்டர்களாக, வக்கீல்கள், மதத் தலைவர்கள், பஸ் சொந்தக்காரர்கள், சினிமாக் கொட்டகை உரிமையாளர்கள், பத்திரிகை பிரபுக்கள், நிலப் பிரப்புக்கள், பாங்கர்கள் முதலிய யாவரும் தற்காப்புச் சட்டை (எஃகு அல்ல; கதர்!) அணிந்திருக்கிறார்கள்! அல்லது பதுக்கல் பொருள்கள் மீதும், இரகசியப் பெட்டி கள் மீதும் மூவர்ணக் கொடி போட்டு மூடி வைத்திருக் கிறார்கள்! அல்லது இரகசிய அறைச் சுவர்களில் கடவுள் படங்களை மாட்டி பூஜை அறைகளாக்கியுள்ளார்கள்! அல்லது காங்கிரஸ் ஆதரவுப் பிரசாரம் என்ற திருத் தொண்டினால் தங்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்!

இப்பேர்ப்பட்ட கடவுள் பக்தர்கள் - காங்கிரஸ் பக்தர்களை - டில்லி ஆட்சி விரோதித்துக் கொள்ளுமானால், இத்தனை பேரையும் கம்பி எண்ண வைக்குமானால், நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்குமானால், அடுத்த பொதுத் தேர்தலில் என்ன ஆகும்?

காந்தியார் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியபோது செய்த மாதிரி உண்டியல் பிச்சை எடுத்துத்தானே தேர்தல் நடத்தவேண்டிவரும்? பிரசாரகரின் சிற்றுண்டிச் செலவுக்குக் கூடக் காணாதே, உண்டியல் பணம்?

"இந்தாய்யா! நீ ஏழு லட்சம் அனுப்பி வை!"
"இந்தாப்பா!நீ பத்து லட்சம் தா!''
''ஓய்! உன் மாவட்டத் தேர்தல் செலவை, அது எத் தனை லட்சம் ஆனாலும் சரி, நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். தெரிந்ததா?"

இப்படியெல்லாம் 10-20 புள்ளிகளோடு வேலையை முடிப்பதெப்படி? தெருத்தெருவாக உண்டியல் பிச்சை எடுத்து, ஒவ்வொரு உண்டியலிலும் ரூ. 17-23 காசு சேர்த்து, காங்கிரஸ் கமிட்டித் தலைவரிடம் கொடுப்பதென்றால் எப்படி?

இப்போதே - வெறும் ஏட்டு சோஷலிசத்துக்கே - காங்கிரஸ் மீது வெறுப்படைந்து மேலே கண்ட பெரும்புள்ளி ஒவ்வொன்றும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று லட்சம் இரகசியமாகக் கொடுத்தால், சுதந்தரா கட்சிக்கு ஏழு லட்சம் இரகசியமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!

இனி, பம்பாயில் செய்த மாதிரி, எல்லாத்துறைத் திமிங்கலங்களையும் பிடிப்பதென்றால், காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகளின் வாழ்த்தும் வாக்கும்தான் கிடைக்குமே தவிர, லட்சம் லட்சமாகப் பணம் கிடைக்காது! (இப்போது பறிமுதல் செய்யப்படும் பணத்தில் இந்தியா முழுவதும் குறைந்த அளவு 10,000 கோடியாவது சேரக் கூடும்!) காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காசு கூடக் கிடைக்காது, அத்தனையும் அரசாங்கத்துக்குப் போய்விடும்!

ஆதலால் மாதிரிக்காக, பூச்சாண்டி காட்டுவதுபோல, பம்பாய் நட்சத்திரங்களோடு நிறுத்திக்கொள்வதே நல்லது! STOP!!

வேண்டாம்! எல்லா மாநிலங்களிலும் இப்படிச் செய்ய வேண்டாம்! பம்பாயில் கூட எல்லாப் பதுக்கல்காரர்களையும் இப்படித் துன்புறுத்தவேண்டாம்! எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சிக்குவதனாலும் இந்த வேலை மட்டும் வேண்டாம்!

வேண்டாம் வீண் தொல்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில், டில்லி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்! பதுக்கல் பெரியவர்களுக்கும் ஒரு வார்த்தை!

இதைக்கண்டு நீங்கள் அஞ்சவேண்டாம்! எல்லோரிடமும் இப்படி நடந்து கொள்ளாது நம் அரசாங்கம்! ஆள்களின் தராதரம்: போட்டிருக்கும் சட்டை: முன்பின் உதவி: இருக்கின்ற தொடர்பு: பெருந்தலைவர்கள் உத்தியோகஸ்தர்கள் நட்பு இத்தனையும் சீர்தூக்கிப் பார்த்துத்தான் நடவடிக்கை அதிகாரிகள் உங்கள் வீட்டுக்குள் நுழைவார்கள்! கள்ளப் பணத்தில் கட்சி கிடையாது! சாதி கிடையாது! மதம் கிடையாது! கொள்கை கிடையாது! கள்ளப் பணக் கும்பல் முழுவதுமே ஒரு தனிக்கட்சியாச்சே!

ஆதலால், ஜெய்ஹிந்த்!
வாழ்க திராவிடம்! வளர்க தமிமுகம்! ஓங்குக ஆத்திகம்!!

அறிவுப்பாதை 28.8.64

அவர் கவலை அவருக்கு!

இன்னும் இடிந்த கோயில்களையும் கோபுரங்களையும் புதுப்பித்து முடியவில்லையே! சாமிகளுக்கும், அம்மன் களுக்கும் நல்ல வீடில்லாமல் விட்டுப்போய்விட்டால் என்ன ஆகும் அவர்களின் கதி? என்பது முன்னாள் நீதிக்கட்சித் தலைவரின் ஒரே கவலை!

நமக்கு அடுத்த ஓராண்டு வரைக்கும் முன் கூட்டியே காலட்சேப அட்வான்ஸ் புக்கிங் வரவில்லையே, மக்கள் நம் அருள்வாக்குக் கேட்காதபடி இப்படி வீணாகக் கெட்டழிகிறார்களே, காலட்சேபவாதிகளின் கவலை!
இரவு 11 மணி முதல் மறுநாள் கால 6 மணி வரையிலுங்கூட கடவுள் பாதுகாப்புப் பிரசாரம் செய்ய முடியாமல் ஒலிபரப்பு நிலையத்தையே மூடி வைத்திருக்கிறார்களே! இந்த இரா நேரத்தில் நாத்திகப் பேய் வந்து நம் பக்தர்களின் உறக்கத்தில் அவர்களை வீரர்களாக்கி விட்டால் என்ன செய்வது? என்பது இந்திய வானொலிப் பிரசாரத்தையே மலையாக நம்பிக்கொண்டிருக்கின்ற இந்தியக் கடவுள்களின் கவலை!

எல்லா எதிர்க்கட்சிக்காரர்களும், நேர்மாறான கொள்கை உடையவர்களும், முரடர்களும் நம்கட்சியில் ஆயிரக் கணக்கில் சேர்ந்து கொண்டேயிருந்தால், நம் கட்சிக்கென்று பரம்பரையாக இருந்துவரும் பழமைக் கொள்கைகளெல்லாம் அழிந்து போய்விட்டால் என்ன செய்வது? என்பது பழைய காங்கிரஸ்காரர்களின் கவலை!

சோஷலிச வளர்ச்சிக்கு இடையூறு என்ற காரணத்தினால், சீனாவில் அரசாங்க அதிகாரிகள் வீடு வீடாக நுழைந்து பூசை மாடங்களிலுள்ள பொருள்களை அகற்றி விட்டு, மத சம்பந்தமான பொருள்கள் விற்பனையாவதையும் தடை செய்கிறார்களாமே! இதுபோல் இந்திய அரசாங்கமும் சோஷலிசம் என்ற பெயரால் இப்படியெல்லாம் செய்யாதபடி ஜனநாயகமதப் பாதுகாப்பு சோஷலிசத்தையே இன்றுபோல் எப்போதும் நிலைநாட்டிக் கொண் டிருக்கவேண்டுமே! என்பது சாதி மதப் பற்று கொண்ட பாரத புத்திரர்களின் கவலை!

இப்படியாக, அவரவர் கவலை அவரவர்க்கு! ஆனால் நமது புது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு என்ன கவலை வந்திருக்கிறது, பார்த்தீர்களா?
"கான்ஸ்டபிள் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. மிகுந்த ஊதியம் கிடைக்கக்கூடியதும், மிகுந்த வசதியானதுமான தொழிற்சாலைப் பணிகள், வாணிபப் பணிகள் - முதலியவற்றை நாடி இளைஞர்கள் போய்விடுகிறார்கள், சென்னையில் 200 கான்ஸ்டபிள் தேவை: திருச்சி நகரில் 150 பேர் தேவை. என்கிறார் திரு. அருள்!

அய்யா! இதற்காகக் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான நடைபாதைப் பிள்ளையார்களும், முச்சந்திப் பிள்ளையார்களும் இருக்கிறார்கள். போதாக் குறைக்கு போலீஸ் நிலையங்களிலும் பிள்ளையாரும், அவர் தம்பியும், திருப்பதியாரும் இருக்கிறார்கள்! கான்ஸ்டபிள் போதாத குறையை இவர்கள் போக்கி விடுவார்கள்!

மக்களுக்கு எவ்வித விக்கினமும் (கேடும் ) வராமல் விக்கினேஸ்வரால் பார்த்துக்கொள்ள முடியாதா? ஏன், இப்படி நாத்திகர் மாதிரிக் கவலைப்படுகிறீர்கள்? இன்றுள்ள துப்பாக்கிகள் கூடத் தேவையில்லை!
"அவனன்றி ஓரணுவும் அசையாது" ஆனால் அம்மன் தாலி பறிபோனால் கண்டுபிடிப்பதற்கு மட்டும் இரண்டு நல்ல துப்பறியும் நாய்களும் சில போலீஸ்காரரும் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், போதும்!

"நான் இருக்கப் பயமேன்?” என்று கேட்கும் சாயிபாபா வேறே ஊர் ஊராக முளைத்திருக்கிறதே- போதாதா?

ஈஸ்வரா! இந்த பக்திப் பாரதமாதாவுக்கு நீதானப்பா "அருள்” (அய்.ஜி. அல்ல!) புரிய வேண்டும்!

அறிவுப்பாதை 25.9.1964

மதுரை மீனாட்சியம்மாள் என் முன்பு தோன்றினாள்

திருமதி மதுரை மீனாட்சியம்மாள் அவர்கள் என் முன்பு தோன்றினாள் பின்வருமாறு பேசினாள்.

மதுரைப் பள்ளிக்கூடம் ஒன்றின் மேல் மாடி திடீரென்று இடிந்து விழுந்தமையால் முப்பது குழந்தைகளுக்கு மேல் இறக்க நேரிட்டதற்காக நான் இன்றும் மனவேதனைப் பட்டுக் கொண்டேயிருக்கிறேன். இந்தச் சமயத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி என்னைக் கேலி செய்வது போலிருந்தது. அதாவது, மீதிக் குழந்தைகள் பிழைத்தமைக்காக எனக்கு அர்ச்சனை செய்து நன்றி செலுத்தினார்கள், என் பக்தர்கள்.

 நான் சிறிது முன் யோசனையுடன் நடந் திருந்தால் அந்தக் கட்டடம் பகலில் இடியாதபடி இரவில் இடிந்து விழுமாறு செய்திருக்கலாம்! அப்போது ஒரு சாவுகூட நிகழ்ந்திருக்காது. அல்லது நகர எஞ்சினியர்கள் மனதில் முன்கூட்டியே புகுந்து, அந்தக் கட்டடத்தில் பள்ளி நடத்த அனுமதி தராதபடி செய்திருக்கலாம்! அல்லது, "தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள்'' என்று அடிக்கடி சொல்கிறார்களே, அதுபோல், செத்துப்போன குழந்தைகளையும், "தெய்வாதீனமாக" தப்பியிருக்கும்படி அவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகு இடித்துத் தள்ளியிருக்கலாம்! பெரியவர்களாவது "பாவிகள்" (கிறிஸ்துவப் பிரசாரகர் அடிக்கடி கூறுவது போல)! அவர்கள் செய்த செய்கின்ற பாவங்களுக்காக இம்மாதிரி மரண தண்டனை கொடுத்தாலும் தவறில்லை! ஆனால் ஒரு பாவமும் செய்யாத, குற்றம் என்றால் என்ன என்றே தெரியாத - கடவுள் நம்பிக்கையில் கடுகளவும் அப்பழுக்கில்லாத - பிஞ்சுகளை நசுக்கிக் கொல்வதென் றால், என்ன அக்கிரமம்!

கண்ணகிகூட குழந்தைகளை நீக்கி மற்றவர்களைத்தானே மதுரைத் தீயில் எரியும்படி செய்தாளாம்!  நான் அவளைவிடக் கேவலமாக நடந்திருக்கக்கூடாது தான்! இப்படியெல்லாம் நான் மனவேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது உயிர் பிழைத்த குழந்தைகளுக்காக என் பக்தர்கள் எனக்கு நன்றி செலுத்துவதென்றால், உயிர் துடித்து செத்துப்போன குழந்தைகளின் மரணத்துக்கு யார் பொறுப்பாளி? நான்தானே?
இதுதான் மீனாட்சியம்மாள் மனக்குறையின் சாரம்!

இதோ இன்னொரு செய்தி: நமது முதலமைச்சர் கார் விபத்துக்குள்ளாகி கை முறிந்து, சிகிச்சை பெற்று குணமடைந்தமைக்காக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வட பழனியாண்டவனுக்கு தனிச் சிறப்பான அர்ச்சனை நடந்ததாம்! காங்கிரஸ் கமிட்டிகளில் இந்த மத பக்தர்களைத் தவிர, மற்ற அஜீஸ்களுக்கும், வின்சென்ட்களுக்கும், நாத்திகருக்கும் என்ன வேலை என்று கேட்பது ஒரு புறமிருக்கட்டும்.


வடபழனியாண்டவனால்தான் (ஜெனரல் ஆஸ்பத்திரி டாக்டர்களால் அல்ல!) முதலமைச்சர் கை முறிவு முழு குணமடைந்தது என்பது உலகறிந்த சங்கதி! பழனியாண் டவனே டாக்டராகவும், நர்சாகவும் வந்த இரவு பகலாக இரண்டு மாதம் பாடுபட்டதை நானே கண்முன்பு கண் டேன்!

ஆனால் அதே பழனியாண்டவன் என்னிடம் கூறியது என்ன தெரியுமா?

"நான் சிறிது அலட்சியமாயில்லாமலிருந்தால், என் பக்தருக்கு இந்த கார் விபத்து ஏற்படாமலே தடுத்திருக்க முடியும். இவர் காரையே ஒரு மணி முன்னர் அல்லது பின்னர் செல்லும்படியாகச் செய்திருக்க முடியும். அல்லது எத்தனையோ விபத்துகளில் கூறப்படுவதுபோல் தெய் வாதீனமாக ஒரு சிறு காயமும் இன்றி தப்பித்தார் என்று செய்தி வரும்படியாகச் செய்திருக்க முடியும் எனது பரம பக்தரையே இப்படிச் செய்தது தவறுதான், இதற்காக வருந்துகிறேன். ஆனால் இந்தக் குற்றத்தை இடித்துக் காட்டுவது போல் எனக்கு அர்ச்சனை செய்வது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை!"

அறிவுப்பாதை 11.9.64