Tuesday, March 19, 2019

ஆ.வி. அம்மாமியும் க.கி. கோமளமும்!

“வாருங்கோ, அம்மாமி! சௌக்கியம்தானே! என்ன சாவகாசமா காலை நீட்டிப்போட்டுண்டு ஏதோ மென்னுண்டு இருக்கேளே! எனக்குக் கொஞ்சம் தாங்களேன்!'' 

"வாடியம்மா கோமளம்! வயசாயிடுத்துன்னா காலே நீட்டிப்போட வேண்டியதானேடீ! ஒன்னாட்டம் நானென்ன, சிறுபெண்ணா! சரி உங்க ஆத்திலே என்ன ஒரே கும்மாளமா இருந்தது. மத்தியானம்? உன் தங்கை புஷ்பவதியாகியிருக்காளோ!'' 

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, அம்மாமி! அவள் புஷ்பவதியாகி எத்தனையோ மாசம் ஆயிடுத்தே! எங்கம்மா ஒரு வைதீகக் குடுக்கையோன்னோ! கல்யாணம் பண்றதுக்கு முன்னே புஷ்பவதியாயிட்டாளம்! அடுத்த பங்குனியில் கல்யாணத்தை முடிச்சுப்பிட்டு அதற்கப்புறம் புஷ்பவதியான தாட்டமா வெளிச்சிக்கலாம்; அது வரையிலே வெளியே சொல்ல வேண்டாம்; என்று பிடிவாதம் பிடிச்சாள், அவள் இஷ்டப்படியே விட்டுட்டோம், நீங்கள் கூட மனசிலே போட்டு வையுங்கோ! இந்தக் காலத்திலே கூட நம்பவாளிலே சில வைதீகப் பிச்சுக்கள் இருக்கே! என்ன பண்ணித் தொலையுறது?'
 
''அப்படியா கோமளம்! நன்னா சொன்னே போ! நான் யாரண்டே சொல்லப்போறேன்! ஆமாம்! வேறென்ன விசேஷம் உங்க ஆத்திலே?"
 
"காலையிலே பேப்பரைப் பார்த்தோம். நமக்கெல்லாம் ஒரு சந்தோஷமான சேதி வந்திருக்கு, அம்மாமி!'' 

''இனி என்ன சந்தோஷம் கிடக்கு, நம்பளுவாளுக்கு! அதுதான் பிராமணனுக்கு வேலையோ, படிப்போ கிடையாதுண்ணு செய்து விட்டான்களே, இந்த காங்கிரஸ் ராஜ்யத்திலே! காங்கிரஸ் - காங்கிரசுண்ணு தொண்டையைக் கிழிச்சுண்டு கத்தினாளே! நம்பகிட்டு ஒருவருஷமா அலையா அலைஞ்சான். சர்க்கார் வேலையே கிடைக்கலே! தலையிலெழுத்து, பாவம்! பஸ் கண்டக்டராயிருக்கானாம். சேலத்திலே! பி.ஏ. பாஸ் பண்ணிட்டு பஸ் கண்டக்டராண்டீ! அதைச் சொல்லிக்க வெட்கப்பட்டுண்டு எட்டாவது வரைக்கும் படிச்சதாச் சொல்லுண்டிருக்கானாம்! என்ன சுயராஜ்யம்வேண்டீருக்கு! மண்ணாங்கட்டி ராஜ்யம்!"

"அதுதான் அம்மாமி நல்ல சேதி வந்திருக்குண்ணு சொன்னேன்! நீங்க இப்போ சொன்னேளே! இந்த அக்கிரமத்துக்குக் காரணமாயிருந்தவன் ஒழிஞ்சு போயிட்டான்களாம்!'' 

"அப்படியா கோமளம்! ரொம்ப சந்தோஷம்! யார் ஒழிஞ்சிபோயிட்டா? ராஜகோபாலச்சாரியாரா?"
 
"அய்யய்யோ! அபசாரம் அபசாரம்! வாயிலே போட்டுக்குங்கோ அம்மாமி! அவர்தானே நம்மையெல்லாம் காப்பாற்றுகிறவர்! கலிகால் மகாவிஷ்ணுவோன்னோ , அவர்! அவரும் நெருக்கியும் கோபால்சாமி அய்யங்காரும் இல்லாட்டிப்போனா நம்பளவா சர்க்கார் ஆபீஸ் பக்கமே எட்டிக்கூடப் பார்க்க முடியாது அம்மாமி!'' 

"னேக்கு இந்த எழவெல்லாம் என்ன தெரியறது? ஏதோ கிருஷ்ணா - ராமான்னு காலத்தைக் கழிச்சூண்டிருக்கேன்! யார் ஒழிஞ்சு போயிட்டாண்ணு சொல்றே!?''
 
"சொல்றேன், கேளு அம்மாமி! ஓமந்தூர் ரெட்டீன்னு ஒருத்தன், அவினாசிலிங்கம் செட்டீன்னு ஒருத்தன், இவன்க ரெண்டுபேரும், அடாடா! நம்பளவாளைப் படுத்தின பாடு உண்டே! சர்க்கார் உத்தியோகத்திலேயெல்லாம் அதிகமான சூத்திராளையே போட்டான் அந்த ரெட்டி! கோவில் சொத்துகளைப் படிப்புக்கும் ஆஸ் பத்திரிக்கும் செலவு செய்யணுமின்னு சொன்னான், இன்னொரு ஆசாமி என்ன செய்தான் தெரியுமோன்னோ! காலேஜ்களிலே நம்ப பையன்களுக்கு இடமில்லாமல் பண்ணீட்டான். ஸ்கூல்களிலெல்லாம் குறள் படிக்கணுமாம், குறள்! ஒரு கீதை, ஒரு வேதம், இவைகளைப் படிக்கலாமே குறளாம்! குறள்! இந்தச் சனியனை நம்பளவாளிலே யாரானும் படிப்பாளோ? இதைக் கட்டாயமாய்ப் படிக்கணும்மின்னு சொன்னான்! என்ன ஆச்சு தெரியுமோ? இந்த இரண்டு பேருக்கும் மந்திரி வேலை போச்சு! போச்சு, அம்மாமி, போச்சு! போயே போயிடுத்து!" 

''அப்படியாடி கோமளம்! என் வயிற்றிலே பாலை வார்த்தேடீ இவ்வளவு அநியாயக்காரர்களுக்கு வேலை போகாமே என்ன செய்யும்! பிரமணாருக்குத் தீங்கு செய்தவாள் உருப்படியாகியதாக எங்கேயானும் படிச்சிருக்கியோ! மகாத்மா காந்தியைக் கூட நம்பளவன் தானே சுட்டுக் கொன்றானாம்! பாவம்!''
 
"பாவமா! என்ன அம்மாமி, பாவம்,..... கிடக்கு! இந்த ரெட்டியார் இன்னிக்கே தன் சொந்த கிராமத்திற்குப் போறாராம்! பேப்பர்லே போட்டிருக்கா! செட்டியாரும் இந்த வாரத்திலேயே தன் ஊருக்குப் போயிடுவார்! இதைவிட நல்ல சேதி நமக்கு வேறென்ன அம்மாமி வேணும்? அதுக்காகத்தான் இன்னிக்கு வடை பாயசத்தோட விருந்து சாப்பிட்டோம்! ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி விருந்து சாப்பிட்டு, போன வருஷம் 31 ந்தேதி யன்னைக்குத்தான் இந்த மாதிரி விருந்து சாப்பிட் டோம்! அதற்கப்புறம் இன்னைக்குத்தான்! உங்க ஆத்துக்குக்கூட லட்டும், பாயாசமும் அனுப்பிச்சேனே! சாப்பிட்டேளோ! நம்மைப் பிடிச்ச பீடைகள் ஒழிஞ்சுது அம்மாமி இனிமேல் யார் மந்திரியா வந்தாலும் பரவாயில்லே! நாம் சொன்னபடி கேட்குங்கள்! இரண்டு காக்காயைக் கொன்னு ஒரு குச்சியிலே கட்டி வச்சுபிட்டா அதற்கப்புறம் நெல்லைத் திங்க காக்காய் வருமா அம்மாமி! இந்த காக்காய் கூட்டத்துக்கு இப்படி தான் புத்தி கற்பிக்கணும்! மவுன்ரோடிலேயும், மயிலாப்பூரிலேயும் இருக்கிற நம்ப பெரியவாளெல்லாம் தீர்க்காயுசா இருக்கணும்!''
 
6.9.1949 'விடுதலை'

No comments:

Post a Comment