Saturday, September 18, 2010

எழுத்து வேந்தர் பேரறிஞர் குத்தூசி குருசாமி, பி.ஏ. அவர்களின் மரணக் குறிப்பு!

எழுத்து வேந்தர் பேரறிஞர் குத்தூசி குருசாமி, பி.. அவர்களின் மரணக் குறிப்பு

இந்த ஆள் பிறந்த நாள் 1906-ம் ஆண்டு ஏப்ரல் 23ந்தேதி. மறைந்த நாள் 1969-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி. அதாவது 12 நாள் குறைய 63 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.
இந்த மரணக் குறிப்புக் கல்லை இங்கு நாங்கள் நாட்டியிருப்பதன் நோக்கம், இந்த ஆளை நாங்கள் மதிக்கிறோம் என்பது அல்ல. இந்த ஆள் ஒரு அபாய அறிவிப்பு. இந்த ஆளைப் போல யாரும் முட்டாளாக வாழக் கூடாது என்பதைத் தமிழர்களுக்கு எடுத்துக் காட்டவேயாகும்.

இவன் வாழத் தெரியாத பழங்காலப் பட்டதாரி! சிலர் இவனை 'அறிவாளி' என்று கூறலாம்! ஆனால் உலகமறிந்த பெரும்பாலோர் 'ஏமாளி' என்றே கூறுகின்றனர். மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வரக்கூடிய சர்க்கார் பணியை உதறிவிட்டு வந்தான். எத்தனையோ கோடீஸ்வரர்களை அண்டிப் பிழைக்கும் திறமையிருந்தும் அந்த நல்ல வழியையும் புறக்கணித்த முட்டாள்!
துறவிக்கோலம் பூண்டிருந்தாலும் இவனை மன்னிப்பார்கள் உலகத்தார்! இல்லறத்தையல்லவா ஏற்றிருந்தான் இவன். உற்றார் உறவினரையும் பகைத்துக் கொண்டான். தன் திருமணத்தின் மூலமாக சொந்தத்திலும் சொத்தில்லை, திருமணத்திலும் சொத்து சேரவில்லை. ஆகவே ஏழையாகப் பிறந்து, ஏதோ சிறிது சேர்த்து இரு குழந்தைகளைப் படிக்க வைத்து, ஏழையர்க்கு உதவி, இறுதியில் ஏழையாகவே மடிந்து, இங்கே எங்கள் சொந்தச் செலவில் புதைக்கப்பட்டிருக்கிறான்.

ஏமாந்தான்!
இவனை நேர்மை வழியில் நடக்கச் சொன்னது யார்? யதார்த்தவாதியாயிருந்தான், எனவே வெகுஜன விரோதியாகவே மாண்டான். தன்னைப்போலவே பிறரும் இருக்க வேண்டும் என்ற பகற்கனவு கண்டான், ஏமாந்தான்வாழ்க்கைத் தோல்விக்கு இவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! காக்காய் பிடிக்கத் தெரியாத மண்டுக்களில் முதல் நம்பர் ஆள்! ஆனாலும் இவனுக்கு எதிலும் மரணத்துணிச்சலுண்டு என்று சிலர் புகழ்ந்து கூறலாம்.

இவன்
உலகப் போக்கை அறியாத பன்னாடைகளின் கூற்றல்லவா இது? குறையுடைய தோழர்களையெல்லாம் எதிர்த்தே தீரவேண்டும். கண்டித்தே ஆகவேண்டும்! என்றால் இவன் மனித இனத்திலேயே பிறந்திருக்கக் கூடாதே! குற்றமில்லையா, விலங்கினத்தில் அல்லவா பிறந்திருக்க வேண்டும்? இவனிடத்தில் மட்டும் குறையே இல்லையா? குற்றமில்லையா? இவற்றைப் பிறர் சகித்துக் கொள்வதில்லையா? அப்படித்தானே இவனும் நடந்திருக்க வேண்டும்?

பணத்துக்கோ, புகழுக்கோ, பதவிக்கோ ஆசைப்படுவதில்லை என்பதே இவனது பிற்போக்குக்கும் மடமைக்கும் ஒரு எடுத்துக்காட்டல்லவா?
காட்டிலுள்ள பறவை விலங்குகளுக்குக் கூடத்தான் இவற்றில் ஆசையில்லை! இவனை அவற்றிற்குத் தானே ஒப்பிடவேண்டும்?

மரணக் குறிப்புக் கல்!
''எல்லாம் நன்மைக்கே'' என்ற இவனது மூலமந்திரம் இவனை ஏமாளியாகவும் கோமாளியாகவும் ஆக்கிவிட்டதுஇவன் சென்ற பாதை, கற்களும் முட்களும் நிறைந்த காட்டுப்பாதை. இதில் எவரும் செல்லக்கூடாது என்று எச்சரிப்பதற்காகவே எங்கள் செலவில் இந்த மரணக் குறிப்புக் கல்லை நாட்டியிருக்கின்றோம்.

ரப்பர் கொள்கை!
இவன் ஒரு கொள்கைக் குரங்கு!
விடாப் பிடியாய்ப் பிடித்து வீணாய்ப் போனவன்!
மனித வாழ்க்கையில் ரப்பர் கொள்கைதான் வெற்றிபெறும். கருங்கல் கொள்கை (மீறிய பளுவினால் பிளந்து முறிவது) கடைத் தேற வைக்காது.
ரப்பராய் இல்லாமல் பாப்பராய் மாண்டு மறந்தான்! எல்லாம் துறந்து நாடோடியாக ஆகி அநாதைப் பிணமாகக் கிடந்தான்!

கால் தூசிக்கு மதித்தார்களா ?
இவனால் முன்னுக்கு வந்தவர் ஆயிரக்கணக்கிலிருக்கலாம்! ஆனால் அவர்கள் இறுதிக் காலத்தில் கால் தூசிக்கு மதித்தார்களா?

மனம்தானே இன்பத்தின் ஊற்று
"அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நான் எவ்வாறு வாழ்ந்தேன்? என் வாழ்க்கையில் இன்பங்கள் கண்டேனா இல்லையா? மனம்தானே இன்பத்தின் ஊற்று. பதவியையும், பணத்தையும், புகழையும் வைத்துத்தானா மனித வாழ்க்கையை அளக்க வேண்டும்?" என்று இவன் அடிக்கடி மனோதத்துவம் பேசியிருக்கலாம்...... வாழ்க்கையில் தோல்வியுற்ற யாவரும் பேசிய வறண்ட தத்துவந்தானே இது?

மூடக் குரங்கு

"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்ற ஆன்றோர் வாக்கு மட்டுமல்ல,  "பதவியில்லார்க்கு உதவியில்லை" என்ற இன்றைய வாக்கையும் உணராத இவனை அறிவாளி என்று நாங்கள் ஒப்ப மாட்டோம். மின்சாரக் கம்பியை இறுக்கிப் பிடுத்து மாண்ட மூடக் குரங்கு என்றே கூறுவோம்.
இந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ள விலாசந் தெரியாமல் மடிந்து போன இவனை இன்றே மறந்து விட்டு எல்லோரும் வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்லுங்கள்!
இந்தக் கல் ஒரு ஆபாய அறிவிப்பு! அதன் அடியில் இருப்பவனும் அவ்வாறே!


இப்படிக்கு,
இவனை ஒருக்கால் மதித்தவர்கள்
10-04-1969


கட்டுரையாளர் குறிப்பு: (அதாவது பேரறிஞர் குத்தூசி குருசாமி பி.. அவர்களின் குறிப்பு)

இம்மரணக் குறிப்பு யாரைப் பற்றி எழுதப் பட்டிருக்கிறதோ அவர் இதற்காக ஒரு சிறிதும் வருந்த மாட்டார் என்று அவர் சார்பில் உறுதி கூறுகிறேன்!


பேரறிஞர் குத்தூசி குருசாமி பி.. அவர்கள் 11-10-1965-ல் இறந்தார். இக்கட்டுரை 'விடுதலை'யில் 5-2-1959-ல் பலசரக்கு மூட்டையில் வெளிவந்தது. மீண்டும் ''அறிவுப்பாதை''யில் 23-04-1965ல் தமது 60-வது பிறந்த நாளன்று பேரறிஞர் குத்தூசி குருசாமி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment