Monday, September 20, 2010

நமது நாடு!

உலகமெல்லாம் சமூக சீர்திருத்தமும், அபேதவாதமும், சமதர்மமும், சம சொத்துரிமையுமான துறைகளில் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது நமது நாட்டில், வருணாசிரம தர்ம மகாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. உலகமெல்லாம் சந்திரமண்டலத்துக்குப் போய் வரவும், ஆகாயத்தில் பறக்கவும், மணிக்கு 100, 200, 300 மைல் வேகம் போகவும், பேசும் இயந்திரங்களை உண்டாக்கவும், மழையை வருவிக்கவும், ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும், செத்தவனைப் பிழைக்க வைக்கவும், அய்யாயிரம் பத்தாயிரம் மையிலுக்கப்பால் நடப்பதையும் பேசுவதையும் காணவும் கேட்கவும் செய்யவும் மற்றும் இது போன்ற அற்புதங்களிலும் ஆராய்ச்சிகளிலும் புத்தி செலுத்திக் கொண்டிருக்கும்போது, நமது நாட்டில்,

இந்தக்குளத்தில் ''பறையன்'' தண்ணீர் மொள்ளலாமா?

இந்தக் கோவிலுக்குள் நாடார் போகலாமா?

இந்தப் பள்ளிக் கூடத்தில் நாயக்கர் படிக்கலாமா? என்கிற விவாதமும்

சூரியனுக்கு 8 குதிரையா? 16 குதிரையா?

தீபாவளி புரட்டாசி மாதத்திலா? அப்பசி மாதத்திலா?

சாமிக்கு நெற்றியில் நாமம் வடகலையா? தென்கலையா?

விபூதியைக் குழைத்துப் பூசுவதா? அப்படியே அடித்துக் கொள்ளுவதா?

சீதையை ராவணன் தலைமயிரைப் பிடித்துத் தூக்கிக் கொண்டுபோனானா? தரையோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனானா?

சுவாமிக்கு தாசி வேண்டுமா? வேண்டாமா?

பெண்களை 12 வயதில் படுக்கை வீடு கூட்டலாமா இல்லை 16 வயதில் கூட்டலாமா?

எந்தப் புராணம் பொய்யான புராணம்? எந்தப் புராணம் நிஜமான புராணம்?

எந்தப் பாட்டு பழைய பாட்டு? எந்தப் பாட்டு இடைச் செருகல்?


சமணர்களைக் கழுவேற்றினதற்கு அகச்சான்று புறச்சான்று இருக்கின்றதா? என்கின்ற ஆராய்ச்சியே மிகவும் முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படுவதோடு இன்னமும் முடிவுபெற்றதாகவும் தெரியவில்லை!

No comments:

Post a Comment